Photobucket

26 August, 2009

தமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா?

தமிழீழம் என்ற:
இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும்
தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது.

முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை,
இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம்.

இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக பட்ச வேலைத்திட்டமாக அகதி முகாம்களில் இருக்கும் மக்களை மீட்டாலே போதும் என்ற நிலைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து விட்டனர். என்றால் இது மிகையாகாது. போராட்டஙகள் கவனயீர்ப்புக்கள், சாலை மறியல்கள், துண்டுப்பிரசுர விநியோகம் என்று புத்துணர்வுடன் கடந்த பத்து மாதங்கள் போராடிய எமது மக்களின் உணர்வுகளும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்ததோடு மெளனமாகி அழுகின்றது.

ஏன் இந்த சோர்வு?
எதனால் இந்த பின்னடைவு?

தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அரணாகக் கொண்டே வாழ்ந்தனர். தாம் வீட்டுக்குள் இருக்கும் போது அவர்கள் மட்டும் போராட வேண்டும் என்று எண்ணினார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு எந்த தமிழனும் வீதியை மறிக்க நினைக்கவில்லை. 24 மணிநேரமும் போராட முனையவில்லை. காரணம் "அவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள்" என்ற அலட்சிய நோக்கு.

இன்னும் சொல்ல போனால் நாம் பணம் கொடுதால் போதும் மற்றவை எல்லாம் முடியும் என்று எமது விடுதலைப்போரை வியாபாரமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர்.

இன்று விடுதலைப்புலிகள் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர்களும் சோர்வடைந்துள்ளமை இவர்களின் மூல சக்தி எது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமது தமிழீழ விடுதலைக்கான போரை அரசியல் வழிமுறையூடாக தாம் தொடர உறுதிபூண்டுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இன்றுதான் போராட்டத்தை அறிந்தவர்கள் போல, விமர்சனம் என்ற பெயரில் முரணான கருத்துக்களை முன்வைப்பதும். பின்பு அக் கருத்துக்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிவுபடுத்துவதும். அதிகரித்து வருகின்றது.

குறிப்பிட்ட சிலரோ தாமே போராட்டத்தை கட்டி காப்பவர்கள் போல தம்மை முன்னைய காலத்தில் அடையாளப்படுத்திய போதும், இன்று போராட்டத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி, இன்னும் சிலரோ தாம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டுள்ள கட்டமைப்புக்குள் இல்லை என்பதால் அந்த கட்டமைப்புக்கள் நேர விரையம் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டனர். அத்துடன் மீண்டும் மக்கள் எழுச்சி கொள்வதுவும் அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதுவும் தேவையற்ற செயற்பாடு என்றும் க்ர்ர்ற முற்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று பலரின் வாயில் உச்சரிக்கப்படுவது முகாமில் இருக்கும் போராளிகளை, மக்களை மீட்க வேண்டும் என்பதே! ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தொடர்ந்தும் தற்காலிகமான தீர்வுகளை நோக்கி பயணிப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ எமது மக்கள் மாத்திரமே!

கூடாரங்களுக்குள் மக்கள் இருப்பது வேதனையே! சித்திரவதைக் கூடங்களுக்குள் போரளிகள் வதைபடுவது ஏற்க முடியாதது தான்.ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாம் ஒரு தற்காலிக தீர்வாக மக்களை , போராளிகளை வெளியேற்றி விட்டால் மட்டும் போதுமா?

நாளைக்கு மீண்டும் இந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த பிரச்சினையை இவ் வகையில் தீர்கலாம் என்று நினைப்பவர்கள் முன்வைத்துள்ளனர். யாரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. ஆள் ஆளுக்கு ஒரு ஆய்வு கட்டுரை! ஆளாளுக்கு ஒரு செயற்பாட்டு வடிவம். போதாக்குறைக்கு வீராப்புக்கள் வேறு.

இன்று ஏற்பட்டுள்ள ஓர் சோர்வு நிலையில் பிரித்தானியத்தமிழர் பேரவை ஆரம்பித்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முயற்ச்சி நிச்சயம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும்

எனவே எல்லைகள் கடந்தும் விஸ்வரூபம் எடுக்கும் சிக்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு எமது தேச விடுதலைக்கான பணியை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான வழிநடத்தலினூடாக பயணிப்பதே எம் இனத்தின் விடுதலைக்கு நாம் செய்யும் கைமாறாகும். எனவே நாம் இந்த விடுதலைப்போருக்கும் எம் மக்களின் அமைதியாக வாழ்வுக்கும் கொடுத்த விலை கொஞ்சமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்


கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.
கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.
எவ்வாறு கைது நடந்தது:
கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது.
கைது செய்தது யார் ?

ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?
மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு இலங்கை புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்மை
ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று இலங்கை அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக இலங்கை அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக இலங்கை இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை இலங்கைக்கு அழைத்துவர ஏற்றது என இலங்கை அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் இலங்கை கொண்டு சென்றனர்.
சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.
இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:
இலங்கை இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.
எது எவ்வாறு இருப்பினும் கே.பியை இலங்கை நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த இலங்கை அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.

சனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு




வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் பெரும் மனிதப்பேரவலம் இடம்பெற்றுள்ளதாக தொடர்ச்சியா இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டிவரும் இலண்டன் சனல்4 தொலைக்காட்சி வன்னியில் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ பதிவு ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பினர் தமக்கு வழங்கியதாகவும், அவ்வீடியோ கடந்த ஜனவரி மாதம் களமுனையில் நின்ற சிப்பாய் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அக்காட்சியை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இச்சர்சைக்குரிய விடயத்தை பூரணமாக நிராகரித்திருக்கும் இலங்கை அரசு தமது படைகள் வன்னியில் புலிகளுக்கு எதிராகவே போராடியதாகவும் மக்களுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்கக்கோரும் மனு அமெரிக்க நீதிமன்றால் நிராகரிப்பு


விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் மனுவினை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபி ள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டில் சில குழுக்களை பயங்கரவாதக் குழுக்களெனப் பிரகடனம் செய்யவும் அவற்றின் சொத்துக்களை முடக்கிவைக்கவும் .

அவற்றுக்கான உதவிகளையும் சேவைகளையும் தடை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளித்து பிறப்பித்த நிறைவேற்று கட்டளை ஒன்றுக்கு எதிராக அமைப்பு ஒன்று பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கிவிடுமாறு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின் வசித்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடையாதாம்



போர் காரணமாக மன்னாரில் தஞ்சமைடைந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரண முத்திரைகளை கொடிய இலங்கை அரசு இரத்து செய்துள்ளது.
நிவாரண முத்திரைகள் இரத்து செய்யபட்ட மக்களுக்கு 25.000ஆயிரம் ரூபா மீள் குடியேற்றத்திற்காக வழங்கப்படும் என்று
பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளதாக மன்னாரில் தஞ்சமடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரதுக்கு தப்பி வந்த ஈழத்தமிழர்

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டு ஒன்று விலாவில் பாய்ந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஈழத்தமிழர் ஒருவர் ராமேஸ்வரத்துக்கு கள்ளத் தோனியில் தப்பி வந்துள்ளார்.
இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டம் சுதந்திரபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் ஜெயகுமார். இவருக்கு சுகந்தினி என்ற மனைவியும், மதி இன்பம், கனி இன்பன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் போர் சமயத்தில் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்து ஒரு தோட்டா பதுங்கு குழியில் மறைந்திருந்த இவரது வலது விலாவில் பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். தற்போது அவரிடம் ராமேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் போலீசாரிடம் அவர் கூறுகையில்,

போர் சமயத்தில் சுதந்திரபுரம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றோம். ராணுவம் நடத்திய தாக்குதலில் பதுங்கு குழியில் தங்கியிருந்த எனது வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து முல்லைத் தீவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் துப்பாக்கி குண்டுகளை அகற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

என்னால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன். இதையடுத்து வவுனியா முகாமுக்கு சென்று அகதிகளோடு தங்கினோம். பின்பு ஒரு படகோட்டிக்கு ரூ 2 லட்சம் கொடுத்து இங்கு தப்பி வந்தோம் என்றார்.

அவரிடம் போலீசார் சோதனை செய்த போது இலங்கை, கனடா, அமெரிக்க, ஐரோப்பா உள்பட பல வெளிநாட்டு பணமும், இந்திய பணம் ரூ.25 ஆயிரமும் இருந்தது.

பின்னர் ரஞ்சித் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

யாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பகிஷ்கரிப்பு

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரிக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது.

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரியை கல்வி நடவடிக்கைக்கள் தவிர்ந்த செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதையும், அச்செயற்பாடுகளில் ஈடுபட மாணவர்களாகிய தம்மை வற்புறுத்துவதாகவும் கூறி மாணவர்களால் ஓகஸ்ட் 18 இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டமானது தொடர்ந்து நடைபெறுகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை இது தொடரும் என யா.தொ.க மாணவர்கள்ர் அறிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலின்போது யா.தொ.நு கல்லூரியை இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகம் போல அதிபர் பயன்படுத்தியதாகவும், தேர்தலுக்கான சுவரொட்டிகள், போஸ்டர்களை ஒட்டும்படி மாணாவர்களை அதிபர் வற்புறுத்தியதாகவும் கூறும் மாணவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம்தராது, கல்வி நடவடிக்கைகள் மட்டுமே அங்கு இருக்கும் என்ற உறுதிமொழி தரப்பட வேண்டும் என்று இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அதிபர் மீது மோசடியும் சுமத்தப்பட்டுள்ளது. கல்லூரியைப் புனரமைக்கவென கொரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணத்தை அதிபர் தவறாகப் பயனப்டுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலர் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக்கூறப்பட்டு இலங்கை புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அதற்கு மாணவர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த மாணவர்களை போலீசார் பயமுறுத்துவதோடு, விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

விரிவான செய்தி வெள்ளவத்தையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை

போர் நிறைவுக்கு வந்து விட்டதாகக் கூறியதிலிருந்து கொழும்பில் தேடுதல்களும் அதிகரித்துள்ளன. அதுவும் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற வெள்ளவத்தைப் பகுதியில் அடிக்கடி போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்கொலைதாரிகளின் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றைய நாள் முழுவதும் வெள்ளவத்தையின் மூலை முடுக்கு எங்கிலும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அலுவலகங்கள், வெளி வேலைகள், சந்தைகள் என புறப்பட்ட பல தமிழர்கள் சாலைகள், ஒழுங்கைகளில் வழி மறிக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் நேற்று இரவு நிலவரப்படி ஒரு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. கோத்தபாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதில் இருந்து கொழும்பின் பிற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

வன்னியில் நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன: 'சர்வாத்ரா' அமைப்பு

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையினரால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடிகிறது என 'சர்வாத்ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.

இயந்திரங்களின் துணையுடன் தாம் பணிகளை மேற்கொள்வதால் இவ்வளவு விரைவாகச் செயற்பட முடிகிறது எனவும் இதுவே மனிதவலுவைப் பயன்படுத்தி மேற்கொண்டால் ஒரு நாளைக்கு 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடியும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் கைப்பற்றிய நிலப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் 'சர்வாத்ரா' அமைப்பும் முன்னாள் இந்தியப் படையினரையும் உள்ளூர்வாசிகளையும் இணைத்து கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

பெரிய அணைக்கட்டுப் போன்ற ஒரு கிலோ மீற்றர் பரப்பளவில் மட்டும் 14 கவச எதிர்ப்பு கண்ணிவெடிக்களைத் தாம் மீட்டதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

மன்னாரின் நெல்வயல்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தற்போது 'சர்வாத்ரா' ஈடுபட்டுள்ளது. மழை காலத்துக்குள் முன்னதாக அப்பகுதிகளைச் சுத்திகரித்து விவசாயிகள் கைகளில் ஒப்படைத்தாலேயே அவர்களால் விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் 'சர்வாத்ரா' அமைப்பின் நடவடிக்கை முகாமையாளர் மனிந்தர் சிங், கடந்த சில நாட்களில் மட்டும் 200 முதல் 300 வரையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளோம் என்றார். அதேசமயம் சில சமயம் ஒரு நாளில் 10 முதல் 20 கண்ணிவெடிகளையே அகற்ற முடிகிறது எனவும் அவர் கூறினார்.

'அர்ஜூன்' எனப்படும் சிறப்பு இயந்திரம் ஒன்றை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த இயந்திரம் எந்த வகையான கண்ணிவெடிகளையும் அகற்றும் வல்லமை படைத்தது. தற்போது அத்தகைய 8 இயந்திரங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் பகுதியில் மண் கடினமானதாகவும் வறண்டதாகவும் காணப்படுகின்றது. அதனால், சிறப்பாக வேதியல் சேர்க்கப்பட்ட தண்ணீரை தரையின் மீது தண்ணீர் தாங்கி வாகனங்கள் மூலம் பீச்சியடித்து அது ஊறுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் கண்ணிவெடிகளை இலகுவாக அகற்ற முடிகிறது என்றார் மனிந்தர் சிங்.

கண்ணிவெடிகளை அகற்றியதுடன் மட்டுமல்லாது சுத்திகரிக்கப்பட்ட கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் தமது அமைப்பு ஈடுபட்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

ஏனெனில் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்ற வழிகாட்டல் வரைபடங்கள் ஏதுமற்ற வகையில் அங்கும் இங்குமாக கண்ட கண்ட இடங்களில் எல்லாம் அவை புதைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கேணல் ராயு/குயிலன்

கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

rajuஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

~ ~ ~

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

~ ~ ~1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுநாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன’ப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.


தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணொளியானது கடந்த சனவரிமாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





வவுனியாவில் மீள குடியேறுவோருக்கு கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்படும்- வவுனியா அரச அதிபர்!

வவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணிகள் 40 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணிகளை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்