Photobucket

15 September, 2009

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக ஈழத் தமிழ்ப் பெண் கண்ணீர்!

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக வவுனியா முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

எதற்காக எங்களை இப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள் என்று கூறியுள்ளார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

இலங்கை ராணுவ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 14-09-09 அன்றுமனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாசலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கைகோர்த்து நின்றனர். அப்போது, இலங்கை அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரியும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இலங்கை முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை நேரில் அறிய மனித உரிமைக் குழுவையும், நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்கு அனுப்பிவைத்து தமிழர்களை மீட்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.


"உடைமை இழந்து வந்தவர்களின் உயிரையும் வதைப்பதா"
"தமிழர் உரிமையை நிலைநாட்டு"
"புத்தம் பேசும் சிங்களரே யுத்தம் புத்தம் சொன்னதா"
"ஐ.நா. சபையே தலையீடு செய்"
"இந்திய அரசே ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் கொடு"
"தமிழக அரசே தமிழனை இழிவுபடுத்தாதே"
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தார்கள்.

13 September, 2009

காவலரண் மீது காவலிருக்கின்ற

பாடல் இடம்பெற்ற இறுவட்டு: வெஞ்சமரின் வரிகள்
பாடல் வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை
பாடலைப் பாடியவர்: நிரோஜன்
பாடலுக்கு இசை: தமிழீழ மகளிர் இசைக் குழு


‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே,
என் மகளே- இந்தப்
பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா?
என் மகளே? காதில் விழுமா என் மகளே?
சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்
பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

சாகும் வயதான போதும் எனக்குள்ளே
சாகப் பயம் இன்னும் மகளே,
சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே,
காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

முந்தி இரவென்ன பகலும் தனியாகப்
போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
வென்று வருகின்றாய் மகளே!

தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு
உயிரை விட வேண்டும் மகளே,
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்
பெருமையது போதும் மகளே,
பெருமையது போதும் மகளே!

நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

வன்னிப் படுகொலைகள் SRILANKA


10 September, 2009

தமிழீழத் தேசியக் கொடியும் புலிக் கொடியும்

“நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

இதைப் பற்றி சில விளக்கங்களை சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

”புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.

புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

புலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.”

இந்த ஆண்டு மார்ச் கடைசியில் வெளிவந்த ஒருபேப்பரில் புலிக் கொடி குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் என்னிடம் ஒரு மாற்றமும் இல்லை. புலிக் கொடி என்பது தமிழர்களின் கொடி. அது தேசம் கடந்தது. தமிழர்களின் பண்பாட்டின் சின்னம் புலிக் கொடி.

ஆனால் தமிழீழத்தின் தேசியக் கொடியை நாடு கடந்த அரசு தன்னுடைய கொடியாக கொள்ள முடியாது. மக்கள் விரும்பினாலும் கூட நாடு கடந்த “அரசு” என்பதன் அடிப்படையில் மரபுகளும் உலகின் சட்டங்களும் அதை அனுமதிக்காது.

சோழ மன்னர்களும் தமது கொடியாக புலிக் கொடியைக் கொண்டிருந்தனர். வேறு சில மன்னர்களும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டிருந்தனர். தமிழீழ அரசும் தன்னுடைய நாட்டின் கொடியில் புலியை முக்கியமானதாக பொறித்திருந்தது. இந்தப் புலிக் கொடிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சோழர்களின் புலிக் கொடி பக்கவாட்டாக நிற்கின்ற புலியைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழீழத்தின் புலிக் கொடி உறுமிக் கொண்டு பாயும் புலியின் முகத்தைக் கொண்டிருக்கிறது.

அனைத்துமே புலிக் கொடிதான் என்றாலும், வேறுவேறு நாடுகள் என்பதனால் புலிக் கொடியின் தோற்றமும் வேறுவேறானதாக இருக்கின்றது.

22 அரபு நாடுகள் இருக்கின்றன. அனைத்திலும் அரேபிய மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அந்த நாடுகளுக்கு தேசியக் கொடிகள் இருக்கின்றன. அனைத்துமே வேறுவேறு தோற்றுங்களை உடையவை. சில கொடிகள் ஒத்த தன்மையை கொண்டவையாக இருப்பினும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு அரசும் தனித்துவமான கொடிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் அவுஸ்ரேலியாவில் குடியேறி அங்கே மண்ணின் மைந்தர்களை ஒடுக்கி விட்டு ஒரு புதிய அரசை அமைத்த பொழுது, அவுஸ்ரேலியாவிற்கு என்று தனியான கொடியையே உருவாக்கினார்கள். தமது பூர்வீகத்தையும், தமது நாட்டின் அரசராக இங்கிலாந்து அரசரை ஏற்றிருப்பதையும் குறிக்கும் பொருட்டு இங்கிலாந்தின் கொடியையும் அதன் மூலையில் பொறித்தார்கள். எப்படித்தான் இருந்தாலும் அவுஸ்ரேலிய அரசை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தனியான கொடியையே அந்த அரசுக்கு உருவாக்கினார்கள்.

இப்பொழுது நாம் அமைக்கவிருக்கின்ற நாடு கடந்த அரசும் தனித்துவம் மிக்க ஒரு அரசுதான். இந்த அரசு தனித்துவமான கொடியையும் அடையாளங்களையும் கொண்டிருப்பதுதான் மரபுகளுக்கும் உலகின் சட்டங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

தமிழீழப் புறநிலை அரசை அமைப்பதாக இருந்தால் தமிழீழத் தேசியக் கொடியே புறநிலை அரசின் உத்தியோகபூர்வமான கொடியாக இருக்கும். புறநிலை அரசு என்பது தமிழீழத்தில் இயங்கிய அதே அரசு வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து இயங்குவது. அந்த வகையில் அதன் கொடி மாறப் போவது இல்லை. ஆனால் நாம் “நாடு கடந்த அரசு” என்னும் புதிய வழிமுறை ஒன்றைய திட்டமிடுகின்றோம். தற்போதைய உலக ஒழுங்குக்கு இது ஏற்றதாக இருக்கும் என்றும் நம்புகின்றோம்.

புறநிலை அரசு வேறு, நாடு கடந்த அரசு வேறு என்பதை புரிந்து கொண்டால் இந்தக் கொடி பற்றிய சந்தேகங்கள் வராது. தமிழீழ அரசின் கொடியை புலம்பெயர் மக்கள் உருவாக்குகின்ற நாடு கடந்த அரசோ அல்லது வேறு கட்டமைப்புகளோ தமது உத்தியோகபூர்வமான கொடியாக கொள்ள முடியாது.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை ஆதரிப்பதையும், தமிழீழமே தமது தாய் நாடு என்பதை வெளிப்படுத்துவதையும், அந்த இலட்சியத்திற்காக போராடுவதையும் குறிக்கும் பொருட்டு தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதும், அதை உயர்த்திப் பிடிப்பதும் இயல்பான ஒரு விடயம். ஆனால் அதற்காக நாம் உருவாக்குகின்ற புது வகையான அரசு ஒன்றின் கொடியாக அதை பிரகடனப்படுத்த முடியாது.

நாடு கடந்த அரசின் கொடியிலும் புலி இடம் பெறலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் அது தமிழீழத் தேசியக் கொடியில் இருந்து வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக இருப்பதே சரியானது. வேண்டுமென்றால் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவுஸ்ரேலியக் கொடி போன்று, தமிழீழத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு கொடியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கலாம்.

நாடு கடந்த அரசுக்கு புதிய கொடி உருவாக்க வேண்டியதன் காரணம் பற்றி இம் முறை எழுதியிருப்பதை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் இன்றைய பணி: விடுதலைப்புலிகள் ஜனநாயகத் தலைமை ஏற்பதை உலகம் அங்கீகரிக்க செய்ய வேண்டும்.

உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல.

சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர்.

ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தன சிங்கள அரசும் அதன் ஆயுதப்படைகளும்.

முதலாவது கிளர்ச்சியை அடக்கியவர் இன்றைய மகிந்த ராஜபக்ச கட்சியின் அப்போதைய தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. பின்னைய கிளர்ச்சியை அடக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணசிங்க பிரேமதாச.

1989 இல் ஜேவிபியின் தலைமை சிங்கள அரச படைகளால் அழிக்கப்பட்டதோடு அதன் கதை முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜேவிபி உயிர்ப்புப் பெற்றது. ஆனால் அதன் பயணப் பாதை இனவாத அரசியல் சார்ந்த ஜனநாயகப் பாதை என்று சொல்லிக் கொள்ளும் வகைக்கு இருப்பது என்னவோ தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிஸ்டம் தான்.

இருந்தாலும் ஜே வி பியின் வரலாறு.. ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னான வீழ்ச்சியும் சமீப பத்தாண்டுகளில் அவர்கள் கண்டுள்ள ஜனநாயக எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக அரசியல் - இராணுவ பரிமானத்தோடு வளர்ந்திருந்து இன்று ஒட்டுமொத்த உலகால் இராணுவ பலத்தை இழக்கச் செய்யப்பட்டு நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நல்ல மீள்வுக்கான உதாரணம் என்று கொள்வதில் தப்பில்லை.

அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல கோரிக்கை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போல் திடமாக உறுதியோடு போராடியவர்களும் யாரும் இலர். அவர்களைப் போல பேச்சு மேடைகளில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தோரும் யாரும் இலர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயகத் தலைமையை ஏற்க முன்வருவதோடு அதனை ஜனநாயகத்தை உச்சரிக்கும் இந்த உலகம் ஏற்கவும் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய வாதத்தினால் ஆயுதக் கிளர்ச்சிகள் திட்டமிட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. இந்திய தேசியம் என்பது தமிழீழத்தின் உருவாக்கத்திற்கு உதவக் கூடிய ஒரு காரணி அன்று. அதன் வீழ்ச்சியே சோவியத் வீழ்ச்சியோடு பல சுதந்திர தேசங்கள் பிறந்தது போல தமிழீழமும் பிறப்பெடுக்க உதவும். அதுவரை தமிழர்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சாணக்கிய அரசியலை செய்ய வேண்டிய நிலை ஒன்று இருக்கிறது.

சிங்கள பேரினவாத அரசிற்கு.. இந்திய தேசியத்திற்கு வால்பிடிக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் எதனையும் அரசியல் ரீதியாக பெறவும் முடியாது சாதிக்கவும் முடியாது.

இந்தியாவில் பஞ்சாப்பில் சீக்கியர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் காஷ்மீரில் தனிநாட்டுக்கான முஸ்லீம்களின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றிகளை சாதிக்காத தன்மையாக இருக்கட்டும்.. பலஸ்தீனத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கம் சிதறிடிக்கப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டதாக இருக்கட்டும் இவற்றின் பின்னாலான அந்தந்த போராளிகளின் நடவடிக்கைகள் என்பது வெறும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விடுவதாக இருக்கவில்லை.

வீழ்ச்சிகளில் இருந்து துரித கதியில் மீண்டு அவர்கள் இன்று ஜனநாய வழியில் தமது மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் சிறீலங்காவில் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருப்பதுடன் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதைக் கூட சிங்கள அரசுகள், கட்சிகள் மற்றும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் விரும்பவில்லை.

ஜே வி பியின் வீழ்ச்சியோடு அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த சிங்கள அரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுடன் வாழ்ந்த மக்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முன் வரவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அண்மையில் இன, மொழி ரீதியான பெயர்களுடன் கூடிய கட்சிகளின் இருப்பையும் உதயத்தையும் சட்டவிரோதமாக்கி இலங்கைத் தீவில் இருக்கும் சிறுபான்மை மக்களின் பல்லின அடையாளங்களையும் ஜனநாயக உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயன்று வருகின்றது.

தற்போது அந்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று சிங்கள சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.. சிங்கள அரசின் உண்மையான செயலுரூபத்தை அதன் இந்த ஒரு ஜனநாயக பண்பழிப்புச் செயற்பாடே உறுதிப்படுத்தப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வீழ்ச்சி என்பது ஏற்படுத்தி இருக்கும் ஒரு சூனியத்துள் இருந்து அல்லது அரசியல் வெற்றிடத்தில் இருந்து அவர்களை மீட்டு வர வேண்டும்.. மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் முன் உதயமாவதே அதற்கு சிறப்பான வழி ஆகும். அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சவாலாக அமைவதோடு தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகள் ஜனநாயக வழியில் வெல்லப்படக் கூடிய சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு முயற்சிகளை இதய சுத்தியோட மேற்கொள்ள உதவியாகவும் அமையும்.

சந்தர்ப்பவாத, காட்டிக்கொடுப்பு, ஆயுத அரசியல் செய்யும் சிங்கள அரசோடு ஒட்டிப் பிழைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களிடம் எந்த தெளிவான தமிழ் மக்களிற்கு என்றான அரசியல் அபிலாசையும் கிடையாது.தமிழ் மக்களிற்காக பேரம் பேசக் கூடிய திறனும் அவர்களிடம் இல்லை.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூட ஒரு உருப்படியான செயற்பாடின்றிய ஒரு வகை உறைநிலையில் இருக்கும் கட்சியாகவே தோற்றமளிக்கிறது. அக்கட்சியின் உறைநிலை சிதறும் போது அதன் அங்கத்தவர்களின் உண்மை முகமும் தெரிய வரும். அது நிச்சயம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல உதவாது. அந்த உறுப்பினர்களின் சொந்த அரசியல்.. எதிர்காலத்தை நிச்சயிக்கும் விதமாகவே அது பெரும்பாலும் அமையும்.

எனவே தமிழ் மக்களுக்கு இன்று வேண்டியது.. திறந்த வெளிச் சிறைகளில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுற்கும் ஒரு வலுவான ஜனநாயக அரசியற் தலைமை. அதை விடுதலைப்புலிகள் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் களத்தில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக உலகின் முன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக வழியில் செயற்பட இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவ ஒரு கோரிக்கயை முன் வைத்து அதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவக் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் செய்பவர்கள்.. சிறீலங்காவின் ஜனநாயக அழிப்பே நடந்து கொண்டிருக்கும் போது அதை ஊக்குவிப்பதுமின்றி கண்டும் காணாதது போலவும் இருக்கின்றனர். இவர்களின் இரட்டை வேடங்களையும் தமிழ் மக்கள் தோலுரித்துக் காட்டி அவர்களின், இந்த உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி தமிழ் மக்களின் உண்மையான அரசியல் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

அப்போதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு இந்திய தேசியத்தின் அழுத்ததால் உலகெங்கும் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை அழிக்க முடியும். அதன் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக அரசியலுக்குள் செயலிறக்கி தமிழ் மக்கள் தமது நீதியான நேர்மையான விருப்புக்குரிய ஜனநாயக அரசியல் உரிமையை தன்னாட்சி உரிமையை வெற்றி கொள்ள முயற்சிக்க முடியும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து போய்விட்டது.. எனி என்ன இருக்கிறது.. என்று ஒட்டுக்குழுக்களின், காலம் காலமாக தமிழ் மக்களை கொன்ற பயங்கரவாத தடைச்சட்டம், சிறீலங்காவின் அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களித்தே வயிறு வளர்த்த நரைத்த தாடிகளைக் கொண்ட காட்டிக் கொடுப்பாளர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக சித்தரிக்க முயல்வது தமிழ் மக்கள் தம்மை தாமே மீள முடியாத படுகுழியில் தள்ளி அரசியல் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

களத்திலும் புகலிடத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே இவை குறித்து சிந்தியுங்கள். விரைந்து ஒற்றுமையோடு, மாவீரர்களும், மாண்டு போன மக்களும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களின் உள்ளங்களுள் ஒழிந்திருக்கும் உணர்வுகளும் சொன்ன, சொல்லும் பாதையில் நடக்க ஒரே இலட்சியத்தோடு செயற்படுங்கள். இதுவே எமது இனத்தின் அரசியல் விடிவுக்கான இன்றைய முதற் தேவையும் கூட.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வன்னி முகாமில் இருந்து தப்பி வந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கொழும்பில் கைது


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிச் சண்டை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி வரை நின்று இவர் சண்டையிட்டவர் என்றும், பின்னர் காயமடைந்ததால் மக்களுடன் மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்த சமயம் படையினருக்கு கையூட்டு கொடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து வந்தார் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு, கல்கிசைப் பகுதியில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்தும் சுவரொட்டிகள்! பொலிஸார் நள்ளிரவில் அகற்றம்



விருதுநகர், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அதை அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.