Photobucket

05 September, 2009

பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?


கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் ‘என் அருமை ஈழமே’ தொகுப்பை முன்வைத்து...

அவர்கள்
ஆயுதங்கள் ஏந்தியது அறவழிலாகாது
தெரியும் எனக்கு.
அவர்களை ஆயுதங்கள் ஏந்த வைத்தவர்கள்
அவர்களை அப்படி ஆக்கியதை
என்னோடு சேர்ந்து
ஆயுதங்களும் இரத்தச் சிந்தல்களும்
மரணங்களும் காயங்களும் துயரங்களும்
வன்மையாகக் கண்டிக்கின்றன.

பல வண்ணங்களைக் காட்டும் ’கலைடாஸ்கோப்’ போல பல்வேறு நிகழ்வுகளையும் சூழல்களையும் சிந்திக்கத் தூண்டும் கவிஞர் தமிழன்பனின் மேற்கண்ட வரிகளோடு இந்நூல் மதிப்பீட்டைத் தொடங்கலாம்.

ஈழத்தமிழர்களிடமிருந்து ‘சுதந்திர உருப்படிகள் உடைத்தெறியப்பட்டபோது, அவர்களின் புல்லாங்குழல்களிலிருந்து புறப்பட்டன தோட்டாக்கள்’ என்று அவர்கள் ஆயுதம் தரித்த காரணத்தைக் கவித்துவத்தோடு தமிழன்பன் வருணிக்கிறார்.

புல்லாங்குழல்கள் துப்பாக்கிகளாய்ப் புகைந்த காலத்திற்கும் முன்னால் தந்தை செல்வாவின் தலைமையில் நடந்த அமைதிப் போராட்டங்களையும் தமிழன்பன் நினைவு கூர்கிறார். அமைதிப் புறாவின் சிறகுகளைத் துண்டிப்பது சிங்கள அரசின் வழிமுறையாகிய பின்னர், தமிழ் இளைஞர்கள் ஆயுதங்கள் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர் என்பதுதான் வரலாறு.

1983 இல் இலங்கையில் மூண்ட கலவரங்களும், அதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்ததும், இந்தியா, இலங்கை, அரசியலில் ஊடுருவுவதற்கான வாய்ப்பாக அமைந்தன. தென்கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் கனவிலிருந்தது. (இருந்து கொண்டிருக்கிறது) இந்தியா, அந்த சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றுடன் பலமான உறவு கொண்டிருந்தது இலங்கை.

அப்போதைய இந்தியத் தலைமையச்சர் இந்திராகாந்தி, இருதட அரசியல் கொள்கை (TTwo Track Policy) ஒன்றை உருவாக்கினார். இலங்கை அரசுக்கும், அன்றைய முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாகிய தமிழர் இலக்கிய விடுதலை முன்னணிக்கும் (Tulf) மத்தியஸ்தம் செய்யும் ஒரு பாகத்தை வகிப்பது; இரண்டாவதாகத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்துப் பயிற்சி அளிப்பது (கலாநிதி ஆ. மனோகரன், இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், பக். 395-396) போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்தது, தமிழீழ விடுதலைக்கு உதவும் நோக்கில் அன்று, இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியைத் தருவதற்கே. இது குறித்து இன்னும் விரிவாக விவாதிப்பதற்கு தமிழன்பன் ஓர் அரசில் புத்தகம் எழுதவில்லை.

இது ஒரு கவிதைத் தொகுப்பு.

ஆனால் இன்று சுட்டத்தகுந்த ஒரு பிரச்சினையின் வித்து, முளைவிடத் தொடங்கிய ஒரு காலம் அது. புலிகள் இயக்கத்தைப் ‘பயங்கரவாத இயக்கம்’ என்று வசைபாடும் காங்கிரசு, இந்தப் பயங்கரவாதத்துக்கு யார் கால்கோள் செய்தது என்கிற சுடுகிற உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆயுதந் தாங்கிய போராளிகள் உருவானதற்கு இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறை மட்டுமன்று.

இந்தியாவின் வல்லாதிக்கக் கனவும் பங்களிப்புச் செய்தது என்பதை இனியும் மறைத்துப் பேச வேண்டியதில்லை.

ஆயுதங்கள்
எப்போதும் அன்பை உச்சரிப்பதில்லை
அவற்றின் மொழியில்
மரணங்கள் பெற்றெடுத்த சொற்களே அதிகம்.

இந்த வழிகளும், ஒருவகையில் அரசின் ஆயுதப் பயன்பாட்டின்மீது மட்டுமில்லாது, போராளிகளின், குறிப்பாகப் புலிகளின் மீதான விமர்சனமாகவும் கொள்ளத்தக்கவை. உண்மையைத் தேடும் நோக்கிலான இத்தகைய விமர்சனப் பொறிகள் கண்டு நாம் துணுக்குற வேண்டியதில்லை.

அண்மையில் பேராசிரியர்கள் சிலரோடு உரையாடும் போது, அவர்கள் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

பிற இயக்கத்தவர்களைத் தலைவர்களைக் கொன்றொழித்தார்கள் புலிகள் என்றனர். நான் அதை மறுக்கவில்லை. பிறகு அமைதியாக அவர்களைக் கேட்டேன்.

“பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?’’
அவர்களிடம் பதிலில்லை.

புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் இப்படி ஆயுத மோதல்களில் கலந்தவர்கள்தாம்.

இந்த மோதல்களின் பின்னணியாக இந்திய உளவுத்துறையே செயல்பட்டது என்பது இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்கு முழுமையாகச் சொல்லப்படாத செய்தி.

துக்ளக், ஹிந்து போன்ற இதழ்கள் மூடி மறைத்த உண்மை.

ஈரோடு தமிழன்பனின் பார்வை, சிங்கள இனவாத ஆசை மட்டுமல்லாது, ‘இது இலங்க¬யின் உள்நாட்டுப் பிரச்சினை’ என்று பாவனை செய்த இந்திய அரசையும் அம்பலப்படுத்தத் தவறவில்லை

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின் பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துகளால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கைபிசைந்து
தாயகத்தமிழன் கலங்குவதைப்
பூமி அறியும் வானம் அறியும்
புதுதில்லி அறியவில்லையே!

புதுதில்லி அறிந்தும் அறியாதது போலிருந்தது. அதற்கு ஆம் போட்டது தமிழக அரசு. நம் கண்முன் நடந்த ஓர் இனப் படுகொலையைத் தடுக்க முன்வராதது மட்டுமன்று - இந்த இனப்படுகொலைக்குத் துணை போன தவற்றையும் சரியாகச் சொன்னால் துரோகத்தையும் செய்தது இந்திய அரசு. அதற்குத் துணை போனது தமிழக அரசு.

உலக அளவில், இந்தப் படுகொலைகளைக் கண்டனம் செய்யாத ஒரு மௌனத்தை உருவாக்கியதிலும் இந்திய அரசின் கைங்கர்யத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எந்த ஒரு போராட்டக் கவிஞனைப் போலவும், தமிழன்பனும், தன் முன்னோடிக் கவிஞர்களையும் புரட்சியாளர்களையும் தான் ஆதரிக்கும் போராட்டத்துக்கு சாட்சியமாக்குகிறார்.

பாப்லோநெருதாவின் பாடல்கள்
ஆயுதக் கைகளால் அள்ளிக் கொள்கின்றன
பெருமூச்சோடும் பெருஞ்சினத்தோடும்
சேகுவேராவின்
சிவப்புக் கனத்த கண்கள்
திருப்புகின்றன ஈழத்தின்பக்கமாய்

இப்படித் தொடரும் தமிழன்பனின் நம்பிக்கைகள் நம் அனைவரின் நம்பிக்கைகள் சிதைந்து போயின என்பதுதான் இன்றைய வரலாறு.

இலங்கையின் கடந்த கால நிகழ்கால வரலாற்றிலிருந்தும், புனைவுகளிலிருந்தும் இனவெறி அரசியலை ஒரு வரலாற்று அமைதியோடு பார்த்துச் செல்லும் தமிழன்பன் ‘என் அருமை ஈழமே,’ நம் காலத்தின் கண்ணீருக்கும் கவிதைக்கும் ஓர் எழுத்துச் சாட்சியமாக இருக்கும். நம் மேன்மைகளுக்கு மட்டுமன்று நம் வீழ்ச்சிகளுக்கும் கூட. இதில் ஊடாடும் வரலாறு ஓர் ஒழுங்குபடப் பேசப்படவில்லை. அப்படிப் பேசப்பட்டிருந்தால் இது ஒரு வரலாற்றுப் பாடப்புத்தகமாக ஆகி இருக்கும். நிகழ்கால போராட்டத்தின் முன்னும் பின்னுமாக வரலாறு ஊடுபாவுவது, பல காட்சி விரிப்புகளை வழங்கிச் செல்கிறது.

‘இலங்கை
தனது முதல் பகலில் கண்டமுகம்
தமிழ்முகம்,
இலங்கை
தனது முதல் இரவில் கேட்ட பாடல்
தமிழ்ப்பாடல்’

என்று தொடங்கும் கவிதையே, கவித்துவத்தின் வெளிச்சத்தில் போராட்ட வரலாற்றை உணரும் மன உணர்வுக்கு வழி அமைத்துவிடுகிறது.

இந்த இனப் போராட்டத்தை ‘இரத்தினச்’ சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்.

எல்லாள மன்னன் மரணம்
திரும்பத் திரும்ப
நிகழ்கிறது - வேறு பெயர்களில்
அவர்கள்
புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல; ஆனால்
புலிகளைத் தவிர
வேறு ஆதரவும் அவர்களுக்கு இல்லை.

என்ற வரிகள் என்னுள் ஆழ்ந்த துயர அலை ஏற்படுத்துகின்றன.

இன்று புலிகளற்ற ஈழத்தமிழர் என்பதை எப்படி எதிர்கொள்வது?

பலர் வரலாம். தம்மை விரைந்து விற்றுக் கொள்வதுதான் அவர்களின் கடந்த காலமாக இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை புலிகளின் வீழ்ச்சியில் பழிதீர்த்துக் கொண்ட நிறைவை அடையலாம். ஈழப் பிரச்சினை ஒருவகையாகத் தீர்ந்தது என்று தமிழினத் தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஆனால், தமிழீழ மண் தன் காயங்களையே கல்லறைகளாக எண்ணித் துளிர்ப்பதை மறக்குமோ?

அதன் மக்களின் நினைவுகளில் இந்தக் கொடுங்கனவு திரும்பி எழமுடியாத ஒரு பேரச்சத்தை விதைக்குமோ? தமிழன்பன் நம்பிக்கை ஊட்டுகிறார்.

இனவெறிப் போரின் முடிவில்
இவர்கள் எல்லோருமே அங்காந்த
சாவுப் பள்ளத்தாக்கின் வாயில்
கொட்டிக் குவிக்கப்படலாம்.
ஆயின்
தனது மண்ணிலிருந்தும் கல்லிலிருந்தும்
மலைகள் காடுகளிலிருந்தும்
ஈழத்தாய்
இரத்தமும் சதையும் எலும்பும் நரம்பும்
சாகாச் சுதந்தர மூசசும் கொண்டவர்களாய்
அவர்களை
மறுஉற்பத்தி செய்வாள்
இது சத்தியம்.
வாழ்க்கைக்கு வழிகாட்டி

ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்



மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்" - சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங் யூ (22.4.2009).

இன்னொரு நாட்டின் மக்களைப் பற்றி கவலை கொள்ளாது, அவர்களை பல்வேறு சூழ்ச்சிகளால் அடக்கியாளும் ஆளும் வர்க்கக் குழுக்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற சீன நோக்கம் தெளிவாகிறது. இலங்கையில் ஆயுதப் புரட்சியை 1971-ல் மேற்கொண்ட அப்போதைய கம்யூனிஸ்ட் புரட்சிகர இளைஞர்களான ஜனதா விமுக்தி பெரமுனாவை அடக்க இந்தியா படை உதவி உள்ளிட்ட எல்லா உதவியும் வழங்கியது. ஜே.வி.பி.யினர் அப்போது சீன ஆதரவுக் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். ஆனால் அந்த இளைஞாகளின் எழுச்சியை அடக்க இலங்கை அரசுக்கு சீனா படை உதவி வழங்கியது.

புவியியல் அமைப்பில் சீனா, இலங்கையிலிருந்து மிகத்தொலைவில் உள்ளது. இந்தியா தன் வாலைச் சுழற்றி வாய்க்குள் விழுங்குவதற்கு ஏதுவாய் இருக்கிறது இலங்கை. இந்திய மலைப்பாம்புக்கு தேவைப்பட்ட தீனியாய் தன்னை தந்து கொண்டிருக்கிற போது, அதற்கு ஈடாய் தமிழினத்தை துடைத்தொழிப்பதற்கான அனுமதியை, உதவியை அடைந்து கொள்கிறது இலங்கை. அந்த வகையில் ஒரு சாமர்த்தியமான இனவெறி விரியன் குட்டி இலங்கை. தேர்தலுக்கு முந்திய ஒரு கவிதை கவிஞர் தமிழ்நதியின் கவிதை இவ்வாறு பேசுகிறது.
" ஒரு வழியாய் நண்ப்பர்களே,உங்கள் கவனத்தை சவப்பெட்டிகளிலிருந்து வாக்குப் பெட்டிகளுக்குக் கடத்தி விட்டார்கள்"

இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண்யப்பா 2008 இறுதியில் சொன்னார் "இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை தேர்தல் முடிவடைந்தபின் தணிந்து விடும். இதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை".

தமிழக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு செய்த முயற்சியின் பெருவிளைவாக, அவர் சொன்னது உண்மையாகி விட்டது. ஈழப்பிரச்சினை எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்த அனைவரும், தேர்தல் வெயில் அடிக்கத் தொடங்கியதில் போர்வையை வீசி எறிந்தார்கள். ஈழப்பிரச்சினை தொடர்பான ஆர்ப்பரிப்பை மௌனிக்கச் செய்தார்கள். அந்த மௌன கணங்களில், ராசபக்சே இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களுடன் போர்க்களத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். 2009 சனவரி முதல் மார்ச்சு முடிய 8000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மன்றம் காட்டியது.

தமிழக அரசியல்வாதிகள் மௌனித்துவிட்ட அந்த நாட்க்களில், ஓராயிரம் ஆண்டு்டுகள் ஓய்ந்து்து கிடந்த்த பின்னர் வாராது போல் வந்த்த மாமணியைத் துடைத்தொழிக்க ராசபக்சே திட்டமிட்டு முன்னேறிக் கொண்டி்ருந்தான். இந்திய அரசு கருணாநிதியைப் பற்றி தெளிவாகக் கணித்திருந்தது. நவீன போர்க்கருவிகள், போர்ப் பயிற்சி, இராணுவ வல்லுநர்களைக் கொடுத்து இலங்கை அரசு வழியாக ஈழப் போராளிகளை அடக்கிவிடத் திட்டமிட்டது போல், தமிழக மக்களின் எழுச்சியைக் கருணாநிதி மூலம் திசை திருப்பிவிடலாம் என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர்களின் வழிகாட்டுதல் படியே கருணாநிதியும் நாடகக் காட்சிகளின் ஒவ்வொரு படுதாவையும் இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். பதவியில் நீடிப்பதற்காக எதையும் பலியாக்கத் தயாராகும் இந்த முதிய கருணாநிதியை அவர்கள் அறிவார்கள்.
அப்படித்தான் ஆயிற்று நண்பர்களே! தேர்தல் முடிவு வெளிப்பட்டது. இந்தியாவில் தயார் நிலையிலிருந்த வாக்குப் பெட்டிகள் ஈழத்தமிழினத்தின் சவப்பெட்டிகளாய் உருவம் கொண்டன.
"ஒரு வழியாய் நண்பர்களே,
உங்கள் கவனத்தை
வாக்குப் பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகளுக்குக் கடத்தி விட்ட்டார்கள்"
தேர்தலுக்குப் பிந்திய கவிதை இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மே 16-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. முல்லைத் தீவை பிண மண்டலமாக்கியிருந்த இலங்கை ராட்சசன், கடைசி விசையைத் தட்டிவிட்டான்.
ரேடார் கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், செயற்கைக்கோள் உதவிகள், 2004-ல் கொடுத்த கிளஸ்டர் கொத்துக் குண்டுகள், ரேடியல் பாம்ப்ஸ், வன்னிமக்கள் மீது இவைகளை வீச இராணுவ வல்லுநர்கள், களத்தில் நின்ற இந்தியச் சிப்பாய்கள் என இந்தியா இதுவரை வழங்கிய உதவிகளை விட, அதிக வீரியம் கொண்ட பேரழிவு ஆயுதமாக இருந்தது தேர்தல் முடிவு.

16-ந் தேதி தேர்தல் முடிவைத் தந்தது இந்தியர் நன்றியாக, பிணங்களை வழங்கினான் இலங்கை ராட்சசன்.
இந்தியா வாக்குப் பெட்டிகளை சவப் பெட்டிகளாய் மாற்றித்தர, அவன் அதைப் பிணங்களால் நிரப்பினான் கடைசி நாளில் 25 ஆயிரம் பேரைக் கொன்ற அடையாளம் தெரியாமல் செய்ய, இந்தியப் பெட்ரோல் ஊற்றி எரித்தான். மண்ணில் புதைத்தால் நாளை நிலைமை மாறுகிற கணங்களில் உலக மனித உரிமை நாய்கள், தோண்டி வெளியே எடுத்த வீசி விடுமென்று அவன் அறிவான்.

II

ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் நடத்தும் கொள்ளைக்கு பொருளாதார வளர்ச்சி, வணிக ஒப்பந்தம், திட்டமிடல் எனப் பல நாகரீகமான பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்களில் முதலில் கொள்ளைக்காரர்கள் நுழைவார்கள். பிறகு கொலைகாரர்களாய் மாறுவார்கள். கொள்ளைக்காரர், கொலைகாரர் என்ற இருபாத்திரங்ககளையும் தனித்தனியாய் அவர்கள் வகிப்பதில்லை.

ஈராக் மீது அமெரிக்கா கால்பதித்து மனிதக் கொலைகள் நடத்திய போது, பெட்ரோல் கொள்ளைக்காக நடத்தப்பட்ட கொலைகளே என்பதை அனைவரும் அறிவர். 2002ம் ஆண்டு நார்வே போன்ற நாடுகளின் முன்னெடுப்பால் உண்டான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ராசபக்சே தன்னிச்சையாக முறித்துக் கொண்டான். நார்வே நாட்டையும் வெளியேறச் செய்தான். உடனடியாக, திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்தி வெளியேற்றினான்.

புலிகள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளியேற்றப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்குத் திறந்த வெளி தயாராக்கப்பட்டது் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதே, இப்பகுதியில் 672 சதுர கி.மீ. பரப்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுமென இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அங்குள்ள 14 கிராமங்களிலிருந்த தமிழர்களை வெளியேற்றி, அதைச் சுற்றி அதி உயர் பாதுகாப்பு வளையம் உருவாக்கிய பகுதியில் 2006ல் இந்திய எரிசக்தித் துறையும், சிலோன் மின்வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க 350 மில்லியன் டாலர் திட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது் எந்தக் கொள்ளையையும் அனுமதிப்பேன் தமிழினத்தை நான் அழிக்க்க உதவி செய்த்தால் போதும் என்ப்பது இனவாத அரசின் நிபந்த்தனை.

பொருளாதார வேட்டைக்குப் பொருத்தமாய் மனித அடக்கு முறைகள் வருகின்றன. ஏற்கெனவே இந்தியா-இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. "சார்க் நாடுகள்" என்ற பெயரில் அந்த அமைப்புக்கு அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாய் தலைமைப் பீடமாய் செயல்படும் இந்தியா இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்குள் தடையற்று நுழைய முடிந்தது் இந்தியாவின் தனியார் மூலதன நிறுவனங்கள் என 50-க்கு மேற்பட்டவை இலங்கையில் உள்ளன. துணி ஆலைகள்(Textiles), பெட்ரோல் நிறுவனங்கள். வாகன உற்பத்தி போன்றவைகளில் 50 விழுக்காடு இந்திய முதலாளிகள் கையில். 1991ல் 740 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் 2000த்தில் 125பில்லியன்(Billion) இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 தொழில் திட்டங்களாகப் பெருக்கெடுத்தன.

உருக்கு, ரப்பர், சிமெண்ட், கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி, மருத்துவம், பொறியாளர் பயிற்சி போன்ற தொழில்களில் இந்தியாவின் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் காலடி பதித்துள்ளன என்பது மட்டுமல்ல. இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலையாரிகளாக ஆகியுள்ளன. இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தனக்குத் தேவைப்பட்ட தருணங்களில் தேவையான அளவு தீர்மானிப்பதாகவும் இந்தியத் தலையாரி ஆகியுள்ளான்.

இனவாதத்தால் உள்நாட்டு மக்களை ஏமாற்றியும், நாட்டின் இன்னொரு இனமக்களை ஒடுக்கியும் செயல்படுகிற ஒருவன் புத்தனைக் கொன்றவன். இன்னொருவன் காந்தியைக் கொன்று புதைத்து பேரெடுத்தவன். தத்தம் நாட்டினது, ஆதிக்கக் குழுக்களின் நலன்களுக்காக செயல்படும் இருவரும் இருபெரும் ஆக்கிரமிப்பாளர்களே. இன ஒடுக்கு முறையை உலகநாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக் கொண்டிருந்த போதும், இந்தியாவை நிரந்தரமான துணையாக ஆக்கிக் கொண்டது இலங்கையின் பலம். இது பற்றி தெளிவாகத் தெரிந்த பின்னும், இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்று போராளித் தலைமைகள் பேச வேண்டிய நிலையிலிருந்தது தான் தமிழினத்தின் பலவீனம்.

2007ல் புலிகளின் வான்படை, இலங்கை கட்டுநாயக இராணுவ விமானங்களைத் தாக்கியழித்த போது, "இந்திய பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து் இந்திய வான எல்லையையும், கடலோர எல்லையையும் பாதுகாக்க, கூடுதல் பலத்துடன் எச்சரிக்கையைhக இருப்போம்" என இந்தியத் தளபதிகள் அறிவித்தார்கள்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் "இலங்கை இராணுவத்துக்கும் எங்களுக்கு மிடையிலான யுத்தம் இது. புலிகளின் வான் படை இந்தியப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது" என உறுதிமொழி தந்தார்.

கடைசியாய் மரண எல்லையிலிருக்கிற வேளையிலும், "நாங்கள் இந்தியாவின் நண்பர்கள், இந்தியாவை ஒரு போதும் எதிரி நாடாய் கருதவில்லை" என்று தான், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

"இலங்கையை ஒரே தீவாய் வைத்துச் சுரண்ட, அடக்கி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எமது விருப்பம். இரு நாடுகளாக்கி அழகு பார்த்தால், இந்தியாவிலுள்ள தமிழினம் தனியாகப் போய், இந்தியாவின் கட்டமைப்பு உடைந்து போய் விடும்" என்பது மட்டும் இந்தியாவின் மறைத்து வைக்கப்பட்ட, இன்னும் வெளிப்படுத்தப்படாத உள்நோக்கமாகும்.

ஒற்றைத் தீவாய், ஒற்றைச் சுரண்டலாய், தனக்கு உள்ளடக்கமாய் இலங்கையை வைத்திருக்க வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கக் கோட்பாடுகளே, ஈழத்துக்கு எதிர் வினைகளாய் உருவாகின.

III

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட ஐ.நா. உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம் தேவையற்றது" .

ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் மே 26ல் இந்தியப் பேராளர் கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். (கோபிநாதன் ஒரு மலையாளி. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன், தேசிய பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணன், ஐ.நா.வின் தூதர் விஜய் நம்பியார் இவர்களனைவரும் மலையாளிகள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது)
"ஒரு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வந்த துன்பமான, நீண்டகால மோதலுக்கு இப்போது தான் இலங்கை முடிவு கண்டிருக்கிறது. நல்லிணக்கதை ஏற்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், துன்பமான இந்த மோதலின் விளைவுகளை வெற்றி கொள்ளுதல் என்ற நடைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பதில் கவனம் செலுத்துவதே உலக சமுதாயத்தின் குறிக்கோளாகவும் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். மாறாக சில நாடுகள் இந்தச் சிறப்புக் கூட்டத்தைத் திணித்திருப்பதன் மூலம் மனித உரிமை மன்றத்தின் பணிகளையே அரசியல் ஆக்கிவிட்டன. இது வருந்தத்தக்க நிகழ்வு" என்று கோபிநாதன் ஐ.நா.மன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஐ.நா.வில் தமிழினப் படுகொலையை ஆதரித்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா கொடி தூக்கியது இது முதல் முறையல்ல் இந்த கோபிநாதன் அச்சங்குளங்கரேயின் இடத்தில் 1983இல், சையத் மசூத் என்பவர் இருந்தார். 1983இல் இலங்கையில் 5000 தமிழர்கள் கொன்று வீசப்பட்ட இனப்படுகொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாகியிருந்த பலரும் கண்டித்துப் பேசினார்கள். "

ஆனால் இந்தியக் குரல் மட்டும், இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என வித்தியாசமாய் ஒலித்தது"

(Syed Masud from India supported the suggestion that the subcommittee should not hastily act in with regard to the situation on the Sri Lanka Island)
- The Hindu 23.8.1983

அதுபோலவே, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் ஐ.நா.வில் வாய் திறக்கவில்லை. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எல்லாப் பிரச்சினை பற்றியும் பேசினார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி மட்டும் பேசவில்லை. இது வருந்தத்தக்கது".

எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராயிருந்த போது, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் வருத்தப்பட்டது மட்டுமல்ல் 1983ல் இவ்வாறு இனப்படுகொலையின் போது பாதிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்கள், அகதிகளாய் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ஏற்றிச் செல்ல இந்தியா கப்பலை அனுப்பியது் அதைக் குறிப்பிட்டு எஸ்.டி.எஸ். "பயணிகள் கப்பலை அனுப்பிப் பயனில்லை. படைக் கப்பலை அனுப்ப வேண்டும்" என்றார்.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவைத் தாண்டி ஐ.நா. மன்றத்துக்குச் செல்வதென எதிர்க்கட்சித் தலைவராயிருந்த கலைஞர் கருணாநிதி முடிவெடுத்து, ஒரு கோடிக் கையெழுத்துகளைத் திரட்டினார். 29.8.1983 அன்று சென்னைக் கடற்கரைச் சீரணி அரங்கில் ஒரு கோடிக் கையெழுத்துப் படிவங்களை பார்வைக்கு வைத்து உரை நிகழ்த்தினார்.

"இப்படிப்பட்ட கோரக்காட்சி களையெல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்றில்லாமல், இந்தியா தான் தமிழ்நாடு - தமிழ்நாடு தான் இந்தியா என்று நாங்கள் கருதிக் கொண்டிருக்க நீங்கள் தமிழர்களுக்குச் செய்தது என்ன?"

"உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்?

உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் நின்றுவிடுவது ஏன்?" கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி.

அப்போது இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் காங்கிரசுக்கும் - ஓரு வேண்டுகோள் வைத்தார். "நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். நாளைக்கு ஜெயவர்த்தனேயை மிரட்டுகிற அளவுக்கல்ல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுகிற அளவுக்கு இந்தியப் படை இலங்கைத் தீவிலே நுழைந்து, அங்கே தமிழர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தருமேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இன்னும் பத்தாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே ஆட்சிக்கு வர முயற்சி எடுக்காது. நீங்களே வேண்டுமானால் தமிழகத்தையும் சேர்த்து ஆளுங்கள். உங்கள் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்.

நாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலே ஈடுபடவில்லை. தமிழன் வாழ வேண்டும், தமிழ் இனம் வாழ வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் தமிழனை வாழ வைக்க வேண்டும்".

1984ம் ஆண்டு டெலோ மாநாட்டில் கருணாநிதியின் சொற்பொழிவு, "இப்போதே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவை உடனே செயல்படுத்த வேண்டும்" என்பதாய் அமைந்திருந்தது.

"இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலில் ஓடுகின்ற ரத்தம் தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கும் துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ், தமிழ் என்று துடிப்பது உண்மையானால், அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இனி பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில இறங்க வேண்டும்". "என்ன செயலில், எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தை தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது."

"இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம். ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காதது போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை".

"எனவே தான் சொல்லுகிறேன். இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக, அதற்குத் தயாராகி விட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித்தமிழ் ஈழநாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழநாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்".

கருணாநிதியின் நியாயமான இந்தப் பேச்சு் அவரின் அன்றைய உரை முதல்வரான இன்றைய கருணாநிதிக்கு உடன்பாடற்றதாய், எதிர்நிலையாய் ஆனது தான் அவலம். வீரதீரனாக நடிக்கும் கதாநாயகனின் வெற்றுத் திரைப்பட வசனம் போல் ஆகிவிட்டது. இன்று அவர் சொல்வதென்ன?

"இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு... ஈழம் கிடைத்தால் எதிர்க்கப் போவதில்லை. மகிழ்ச்சியடைவேன்." கலைஞர் கருணாநிதியின் கடந்தகாலங்கள் அவரின் நிகழ்காலத்தை கேள்விக்குட்படுத்துகின்றன. அந்தந்த காலத்திற்கு அவர் பேசும் வீரவசனங்களை அந்தந்த காலத்திற்குரிய தனித்தனி கல்லறைகளில் புதைத்து விடுகிறார். பழையவற்றைப் புதைத்த கல்லறைகளின் அருகே புதிய கல்லறைகளை உண்டாக்கி வருவதற்கு, அதிகார நிலையோடு ஒன்றாய்க் கலந்து விட்ட அவரது வாழ்வியலே காரணம்.

"தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்காக போர்க்களத்தில் தன் மகனையே சாகக் கொடுத்தான் ஈழத்துப் போராளி் மகன்களின் அமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அலைந்து கொண்டிருந்தார் இங்குள்ள கருணாநிதி"

என்ற புதிய ஒப்புமைச் சொல்லாடலை அவரது வாழ்வியல் தான் உருவாக்கியது. எழுச்சிகரமாகத் தொடங்கி வார்த்தை ஜாலமாக முடிந்து போன அவரது வாழ்க்கைதான் அடிப்படை. கருணாநிதியைப் போல், தமிழினத்தை நம்பச் செய்தவரும் இல்லை. அவரைப் போல் தமிழனத்தை மோசம் செய்தவரும் இல்லை.

அக்.14இல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கலைஞர். "15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி செய்யவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்" என்ற தீர்மானம் - அனைத்துக் கட்சிகளின் முடிவாக வந்தது. டெல்லிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசுக்கு நெருக்கடியைத் தருமென போர் முடிவுக்கு வருமென அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்திருந்தது.

ஏனென்றால்
இந்தப் போரை இந்தியா தான் நடத்துகிறது என்பது கலைஞருக்குப் புலனாகியிருந்தது போலவே எல்லோருக்கும் வெளிச்சமாகியிருந்தது.

ஒரு வாரத்தில் இலங்கையிலிருந்து, ராசபக்சேயின் தம்பி பசில் ராசபக்சே அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கான சூழலே இல்லையென விளக்கிவிட்டுப் போனார் போரைத் தொடருங்கள் என்று அவருக்குச் சொன்ன பிரணாப் முகர்ஜி கலைஞரிடம் வந்து பேசினார். என்ன பேசினார்கள் என்று தெரியாத மூடு மந்திரமானது. "அனைத்துக் கட்சிகள் கூடி எடுத்த முடிவு இது.

எனவே மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீங்கள் சொன்னதை பரிசீலிக்கிறோம்" என கலைஞர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளை மதிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச ஜனநாயகப் பார்வை கூட இல்லாமல், பிரணாப்முகர்ஜியின் பேச்சு எனக்குத் திருப்தியளிக்கிறது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் நாடகம் போலவே பல நாடகங்களைத் தொடர்ந்து, அரங்கேற்றிக் கொண்டிருந்தவர் - திடீர் உண்ணா நோன்பு நாடகத்தையும் நடத்திக் காட்டினார். வங்கக் கடலின் இந்த முனையில் அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கடலின் இன்னொரு முனையில் ஈழத்து உறவுகள் சொல்லொணாத் துயரத்து்க்குள்ளும் மரணத்துக் குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அக்டோபர் 14 துரோகத்தின் பின் ஐம்பதாயிரம் தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. மே 16ல் முள்ளிவாய்க்கால் நெடுக 25 அயிரம் பிணங்கள் ஒரே நாளில் விழுந்தன. கடைசியாய் ஒரு லட்சம் பேரைக் காவு எடுத்து தீவிர வாதத்தை ஒடுக்கியாயிற்று என்று ராசபக்சே குலுக்கிய கரங்களுக்குள் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் கரங்கள் மட்டுமல்ல் கருணாநிதியின் கரங்களும் இருந்தன.

"உங்கள் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்" என்ற ராசபக்சேவின் எக்காளம், இந்தியாவுக்குச் செலுத்திய காணிக்கை மட்டுமல்ல் கருணாநிதிக்குச் செலுத்திய காணிக்கையும் தான்.
ஈழப்போர் இந்தியாவின் துரோகத்தினால் வீழ்ந்தது் அந்த துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.





வீழா வீரங்கள்...!


அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'.. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டுது போல". பதிலுக்கு அப்பா "ஓமோம் ஓமோம் சத்ததைப் பார்க்க அப்படித்தான் தெரியுது, பலாலி கோவமா இருக்குது இழப்புகள் போல" என்ற அதற்கு அங்கிள் இருக்கும் விடிய பேப்பரில பார்க்கத்தான் தெரியும்" என்று பதில் தந்தார். என்ன சாதாரணமாய் இருக்கினம். என் மனம் கேள்வி கேட்டுவிட்டு, நினைவுகளால் விரிகின்றது.

அவனை சந்தித்து நண்பனாக்கியது அதிஸ்டமோ துரதிஸ்டமோ நான் அறியேன். வீட்டுக்கு அருகில்தான் அவனும் வாழ்ந்தான். இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை. கனகாலம் முகம் அறிந்திருந்தும் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அன்று ஒருநாள் திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்காய் வாழைமரம் கேட்டு வீட்டுக்கு வந்தான். "வாழைமரம் வேணும் தருவிங்களா" "ஏன் தம்பி எதுக்கு " சம்பிரதாயமாய் பதில் கேள்வி எழுகிறது அம்மாவிடம் இருந்து. "திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு 'ஆன்ரி' ". "அதுதான் பொடியங்கள் வாழைமரம் கட்ட வேணாம் என்றிட்டினம் எல்லோ பிறகேன் கட்டுறீங்கள்..". "ஓம் 'ஆன்ரி' ,இது நான் எங்கள் வீட்டில படம் வைக்க" பதிலுக்கு அவன். "சரி தம்பி வெட்டிப் போங்கோ" என்ற அம்மா "அந்த வாழைகளைக் காட்டி விடப்பு" ...என்றா என்னிடம். கத்தியோடு வாழை காட்ட அவனைத் தொடர்கிறேன். அப்போ.. "உங்களைக் கண்டிருக்கிறன் எங்க இருக்கிறனீங்கள்" தெரிஞ்சும் கேட்கிறேன்.. "செல்வாண்ணா கடைக்கு அருகில" என்றான் அவன். எங்க படிக்கிறீங்கள் "கொக்குவில் இந்துவில"..பதிலுக்கு அவன் "நீங்கள்"... நான் "பற்றிக்ஸ்".

அன்றிருந்து சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் கதைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவனே கேட்டான். "நீங்கள் தமிழுக்கு ரியுசன் போறனீங்களோ".. இல்லை நான் தமிழுக்குப் போறதில்லை.. " என்றேன். கந்தசாமி மாஸ்ரட்ட போக விருப்பமா" என்றான் அவன் பதிலுக்கு. "அம்மாட்டக் கேட்டிட்டு சொல்கிறேன்" என்றேன். அதைத் தொடர்ந்து.. அம்மாவிடம் கேட்க அவாவும் சம்மதிக்க நாங்கள் இருவருமே அவரிடம் படிக்க இணைந்தோம். அவருடைய வகுப்புகள் விடிய 6 மணிக்கு ஆரம்பிக்கும்.அவன் விடிய 5:00 க்கே வீட்டு கேற்றில் தட்டிக்கொண்டு நிற்பான். எனது 'சைக்கிளில்' அக்கறையோடு தோழமையோடு இருவரும் வகுப்புப் போவோம். கட்டுரைகள் வீட்டுவேலைகள் கலந்தாலோசித்து செய்வோம். அப்படியே நாங்களும் நல்ல நண்பர்களானோம்.

திடீர் என்று ஒருநாள் நான் கந்தரட்ட வரேல்ல என்றான்.."ஏன் என்ன பிரச்சனை.." . என்றேன். "பிரச்சனை ஒன்றுமில்ல"...என்று இழுத்தான். சொல்லுங்கோ நாங்கள் இயன்றது செய்யுறம் என்ற.."நான் வேற ரியுசனுக்கும் போறனான்.. எல்லாத்துக்கும் காசு பிரச்சனை அதுதான்" என்றான். பாவம்.. அது உண்மைதான். அவன் வீட்டில் அம்மா தான் எல்லாம்..வருமானம் குறைவுதான். அவன் அப்பா வேறு திருமணம் செய்து போய்விட்டார். நான் சொன்னேன் "சரி நாங்கள் கந்தரோட கதைப்பம்...அவர் கஸ்டம் என்றா இலவசமாப் படிக்க விடுவாராம்". கதைச்சுப் பார்ப்பமே என்றேன். ஓம் என்றான். நாங்களும் கதைக்க அவரும் ஓம் என்ற அவன் வகுப்பைத் தொடர்ந்தான். பிரச்சனைகள் ஏதுமின்றி எங்கள் கல்வியும் நட்பும் தொடர்ந்தது.

வழமை போல் அன்றும் வகுப்பிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. வரமாட்டான் என்று சொல்லவும் இல்லை. காத்திருந்துவிட்டு நான் வகுப்புக்கு சென்றுவிட்டோன். அடுத்த நாளும் அவன் வரவில்லை. வீட்டில் போய் விசாரிக்க அவன் உறவுக்காரர் வீட்டுக்கு கிளிநொச்சி போனதாகச் சொன்னார்கள். ஏக்கம் ததும்ப எப்ப வருவார் என்று கேட்டேன். "அவர் அங்க இருந்துதான் படிக்கப் போறார்" என்றார்கள்...அது கேட்டது முதல் மனசு கனத்தது. நண்பனென்று அவனுடத்தான் அதிகம் பழகியது, இருந்தும் இடையில் இப்படிச் செய்திட்டானே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... கோவமும் கவலையும் சேர ஏமாற்றத்துடன் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மணலாறில் மின்னல் இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது ஒரு மாதத்துக்கும் மேலாய் பெரிய சண்டை. காயமடைந்த போராளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். பாடசாலையில் இருந்து போராளிகளைப் பரமாரிக்க நண்பர்கள் போனார்கள். நானும் ஒரு நாள் கூடிப் போனேன். அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போ "இங்க ஆக்கள் அதிகம் நிக்கிறீங்கள் மற்ற வோட்டுக்குப் போங்கோ" என்று ஒரு போராளி அண்ணா சொன்னார். நானும் எங்களில் சிலரும் அங்கு போனதும் கண்டகாட்சி மனதை உலுக்கியது. முதற் கட்டிலில் அவன்.... நண்பனாகி.. சொல்லிக் கொள்ளாமலே..என்னைப் பிரிந்தவன் கால் ஒன்றை இழந்து காயத்தோடு அனுங்கியபடி.... ஓடிச்சென்று பரிவோடு பார்வைகளால் பேசினேன். அவன் கண்கள் கலங்கின. ஏக்கங்கள் ததும்ப என் கைகளைப் பிடித்தான். கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவனையும் மற்றவர்களையும் பராமரிக்கும் பொறுப்பை கேட்டு வாங்கி சில தினங்கள் செய்தேன்.

சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி அவனும் வீட்டுக்கு வந்து பேசினான். நான் மீண்டும் போகப் போறன். "அம்மா பாவமில்லையா" என்றேன்.." அப்படிப் பாத்திருந்தா நான் போயிருப்பேனா.. என் கடமையை நான் முழுக்க முடிக்க வேணும்" என்றான் அவன். அவனிடம் உறுதி தெரிந்தது.. வேட்கை இருந்தது. பாசறையில் வளர்ந்தவன் எல்லா..திடமாய் இருந்தான். உன் இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவதை விட வேறெதுவும் பேச சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். அவனுடைய உறுதி என்னை வியக்க வைத்தது. அன்று ஒரு நாள் கோபத்தில்.. அவனுடன் வைத்த நட்புக்கான முற்றுப்புள்ளியை அந்தக் கணமே அகற்றிக் கொண்டேன். ஒரு இலட்சிய வீரனை நண்பனாக்கியதில் எனக்குள் இறுமாப்பு பற்றிக் கொண்டது.

அதன் பின் எங்கு சண்டை என்றாலும் அவன் எண்ணங்களே என்னை ஆட்கொள்ளும். இன்றும் சண்டை என்றதும் அவன் எண்ணக்களே எண்ணில் வந்து மோதின. பொழுது விடிய விடிய சண்டையின் உக்கிரம் தனிந்தது. பயம் நீங்கி கொஞ்சம் படுப்பம் என்று தூங்கிய நான் எழும்ப 10 மணிக்கு மேல ஆகிட்டுது. முகத்தைக் கழுவிட்டு சைக்கிளை ஒரு மிதி மிதிச்சு பேப்பரோட வந்து நின்றேன். செய்தி பெரிசா இல்லை. "மண்டைதீவு இராணுவ முகாம் மீது தாக்குதல்" தலைப்புச் செய்தியோடு விபரம் பெரிசா இருக்கவில்லை. விபரங்கள் கிடைக்கல்லப் போல ஸ்பெசல் பேப்பர் வரும் என்று காத்திருந்தன். வீட்டில் எல்லோருக்குள்ளும் செய்தியறிய ஏக்கம் கலந்த ஆவல். அன்றைய பொழுது அசாதாரணமாகவே கழிந்து கொண்டிருந்தது.

பிற்பகல் போல ஸ்பெசல் பேப்பர் வந்தது. விபரங்கள் தேடத்தேட ஏக்கங்கள் அதிகரித்தது, போராளிகளுக்கு என்ன இழப்பு. விபரம் காணேல்ல என்று எண்ணியபடி பக்கங்களைப் புரட்டினேன். ஓர் இடத்தில் வீரச்சாவு பட்டியலில் சிறிதாக இருந்தது. சில பெயர்கள் மட்டுமே இருந்தன. அப்பாடா பெரிய இழப்பு இல்லை. என் நண்பன் அவன் பெயரும் இருக்கவில்லை. ஏதோ சொல்லி மனம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்கும் போது சோக கீதம் இசைக்கும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மனதுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை உணர்ந்தேன். பல கேள்விகள் முளைக்கலாயின.. அவன் மட்டுமா எனக்கு நண்பன்.. பழகினால் தானா நட்பு.. சொந்த மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட இவன் நண்பன் இல்லையா.. ஏன் நான் இப்படி சுயநலத்தோடு ..??! விடை காணத்துடித்தேன்..அன்றிலிருந்
து எல்லாப் போராளிகளயும் என் நண்பர்களா எண்ணிக் கொண்டேன். நண்பன் ஒருவன் வித்தாகி விழுந்துவிட்டால் கண்ணீர் சிந்தித்தான் செய்தியே படிப்பேன். வித்தாகிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று மரியாதை செய்வேன். "எதிர்பார்ப்புகள் இல்லா உன்னதங்கள் மாவீரர்கள்" என்ற வசனத்தை எனக்குள் பொறித்துக் கொண்டேன்..! அவர்களை உதாரணமாக்கி வாழப்பழகிக் கொண்டேன். உண்மையில் என் நண்பனே இத்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டவன். இப்போ அவனே புரட்சியாளன் எனக்குள். பிறிதொரு சண்டையில் அவன் வீரச்சாவடைத்த போது அவனுக்காக அழவில்லை.. இறுமாந்து கொண்டேன். எனக்குள் புரட்சியாளனாக அவனே வாழ்கிறான். அவன் வீழ்ந்தாலும் அவன் விட்டுச் சென்ற நினைவுகள் வீழாது வாடாது.