Photobucket

20 August, 2009

கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்


கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும், இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கும் படத்தையும் எவ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

29 வயதான சதா சரத் சந்திரன் என்ற இவர், புலிகளுக்கு, வானை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை கொள்வனவிற்கு துணை புரிந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆயுள் தண்டனைக்குட்படுத்தப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றொரு கனேடியரான நடராசா யோகராசாவும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவர்களைத் தவிர சகிலால் சபாரட்ணம் என்ற கனேடிய தமிழ் காங்கிரஸின் தகவல் தொடர்பு கணிப்பாளர் நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

அத்துடன், மேலும் மூன்று கனேடியர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

2006 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி நியுயோர்க் லோங் ஐலண்ட் பகுதியில் ஆயுத ஒப்பந்தகாரர் ஒருவருடன் பேச்சு நடத்திய சரத் சந்திரன் நிதி ஒரு பிரச்சினை அல்ல என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் கனடாவில் நிதி சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தி அதனடிப்படையில் நிதிகளை சேகரித்தார்.

இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கனடாவின் இரகசிய புலனாய்வு அறிக்கையின் படி, விடுதலைப் புலிகளுக்கு வருடமொன்றுக்கு 12 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்: விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா


சரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.

இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டு களித்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கை யில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.

அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர் தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற் பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளி வீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட் டிருந்தது.

யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக் கென வைத்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர். பலாலி இரா ணுவ தலைமையகத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் தேர் வீதியில் வந்து கொண்டிருந்த போது மேல் இருந்து பூ மாரிபொழிந்து கந்தனை வழிபாடு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது

அதிகாரப் பகிர்வின்றேல் புலிகள் மீண்டும் அணிதிரளும் வாய்ப்பு ஏற்படும்-அமெரிக்கா எச்சரிக்கை


இலங்கையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படாவிடின், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படுமென்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபேட் பிளேக் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபேட் பிளேக் மேலும் கூறியதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அதிகாரங்கள் பகிரப்படா விட்டால், அது மீண்டும் தழிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதேவேளை, இலங்கை அரசாங்கம் ஆயிரக்கணக்கான மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றது.

இலங்கையில் அரசியல் இணக்கமொன்று காணப்படாமை குறித்து, மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழர்களிடம் மாத்திரமல்லாது, இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும். அதிகாரங்கள் இலங்கையில் பகிரப்பாடாவிடின், தமிழ் மக்கள் விரக்தியடைவர். இதனால், புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்

வன்னியின் துயரமும் உலகத்தின் பாராமுகமும்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தங்களின் குடும்பம், இல்லம், சொந்தங்கள், சொத்துப் பத்துகள், நிலம், தொழில் என்று அனைத்தையும் இழந்து, எந்த வன்னி மண்ணில் ஒராண்டுக்கு முன்னர் வரை வளமாக வாழ்ந்தனரோ அதே பூமியில் இன்று முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், எங்கே அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போரில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திய கொடூரத் தாக்குதலி்ல் உயிரிழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போக, குண்டடிபட்டு, கை, கால் இழந்து, மருத்துவ சிகிச்சை ஏதுமின்றி, சிங்கள இராணுவத்திடம் சிக்கிய சற்றேறக்குறைய 3 இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 33 முகாம்களில் கடந்த வாரத்தில் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது

எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் இடுப்பளவிற்கு நீர் பெருக்கு, எங்கும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பூமியில் குழி வெட்டி ஏற்படுத்தப்பட்ட கழிவுக் குழிகள் சிதைந்து அதில் தேங்கியிருந்த கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து சுற்றுச் சூழலை கெடுத்துள்ளது, சமைக்க அளிக்கப்பட்ட விரகுகள் மழையில் நனைந்து ஈரமானதால் கொடுத்த கொஞ்ச நஞ்ச உணவுகளை சமைத்து உண்ண வழியில்லை, மழையால் அந்தச் செம்மண் பூமி சேறானதால் அந்தப் பகுதிக்கு வாகனங்களில் தூய குடி நீர் கூட கிடைக்காமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று வந்த வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்றும், வட கிழக்கு பருவமழை பொழியும் காலத்தில் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக, ஏற்கனவே மோசமான சுகாதார சூழல் உள்ள அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அந்த முகாம்களுக்கு சென்று வந்தவர்கள் அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள முன்றரை இலட்சம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் அபாய அறிவிக்கை செய்தும் போரை நிறுத்தி மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் உலக நாடுகளும் .நா.வும் எடுக்காததால் இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அந்த அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மிகக் கொடுமையான சூழலில், போதுமான அடிப்படைத் தேவைகளும், வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இயற்கையால் ஏற்படும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனித உரிமை கருத்தரங்குகளில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்ட சூழலில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்து அவர்களின் துயரத்தைப் பண்மடங்காகியுள்ளது.

திசை திருப்பும் சிறிலங்க அரசு!

போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம், இதற்கு மேல் அவர்களால் துளிர் விட முடியாது என்று கொழும்புவில் இருந்து கொண்டு வீர வசனம் பேசிம் சிறிலங்க அரச தலைவர்கள், முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை. அதற்கான நிதிப் பலமும் சிறிலங்க அரசிற்கு இல்லை.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க உலக நாடுகளிடமும், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமும் வாங்கிய கடன்கள் அனைத்தையும் இராணுவத்திற்கு செலவிட்டுவிட்டு, போரில் இறந்து போன இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய மாத ஊதியத்தைக் கூட தர வக்கற்ற நிலையில், இறந்த போன வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்து சிங்கள மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்க அரசு, முகாம்களில் உள்ள மக்களை .நா.வின் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்காமல், தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைப் பிரித்து, துன்புறுத்தி கொன்று வருகிறது. இதனை உலகம் அறிந்து கொள்ளாமல் தடுக்க முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்களை அனுபதிக்க மறுத்து வருகிறது. அதன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.

முகாமிலுள்ள மக்களை தங்களிடம் ஒப்படைக்காத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை (கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை) .நா.வின் அகதிகள் அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் தேவையான உணவும் .நா.வின் உலக உணவும் திட்டத்தின் கீழ்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை நேரடியாக அம்மக்களிடம் விநியோகிக்க அனுமதிக்காமல், சிறிலங்க இராணுவமே பெற்றுக் கொண்டு விநியோகித்து வருகிறது (.நா.வின் இந்தத் திட்டத்திற்கும் போதுமான நிதி உலக நாடுகள் இடமிருந்து வராததால், தங்கள் திட்டத்தின் கீழ் வழங்கிவரும் உணவு அளவை பாதியாகக் குறைக்கும் நிலை ஏறபட்டுள்ளது என்று இவ்வமைப்பு கூறியுள்ளது). உண்மை இவ்வாறிக்க, மழையினால் முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளுக்கு .நா.தான் காரணம் என்று கூசாமல் கூறியுள்ளார் சிறிலங்க பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச! "தமிழர்கள் எங்கள் மக்கள், அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும், இப்போதே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த முற்பட்டால் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு? நாங்களல்லவா?" என்று கருணைக் கடலாகப் பேட்டி அளித்துவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வக்கற்று, எல்லாவற்றையும் .நா.தான் செய்கிறது, எனவே அவர்களே பொறுப்பு என்று கூறுவது எவ்வளவு வெட்கம் கொட்டப் பேச்சு. ஆனால் வெட்கம், கருணை, மனிதாபிமானம் என்பதெல்லாம் இந்த பெளத்த - சிங்கள இனவெறியாளர்களிடம் தேடினால் எங்கிருந்து கிடைக்கும்!
மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் பெறவும், கழிவறைக்கு செல்வதற்காகவும் அவர்களை நாள் முழுவதும் வரிசையில் நிற்க வைத்து நாளும் அலைக்கழித்துவரும் இந்த வெறியர் இன்று கூறுகிறார்அவர்களிடையே பதுங்கியுள்ள புலிகளைத் தேடுகிறோம், எல்லா புலிகளையும் தேடி கண்டு பிடிக்கும் வரை மீள் குடியமர்த்த முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக் காடுகளில் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து மீண்டு்ம் போரைத் துவக்கி விடுவார்கள்’.

"
விடுதலைப் புலிகளே இல்லை, எல்லோரையும் ஒழித்துவிட்டோம். புலிகளின் படியி்ல் இருந்து தமிழர்களை மீட்டு விட்டோம்" என்று சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும், நாடாளுமன்றத்தில் ராஜபக்சவும் வீராவேசத்தோடு முழங்கினார்களே? இப்போது மீண்டும் புலிகளைத் தேடுவது எதற்கு?

கோத்தபய கூறியதில் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான (24,000 பேர் என்று கூறுகிறார்கள்) இளம் வயதினரை தனியாக பிரித்து அவர்களைப் புலிகள் என்று முத்திரையிட்டு, சித்தரவதை செய்து வருகின்றனர். அந்தப் பகுதிகளுக்கு யாரையும் நுழைய விடாமல் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது சிறிலங்க இராணுவம்.

இவர்கள் மட்டுமின்றி, மேலும் 3,000 இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள மக்களையும் நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றனர். இப்படிப்பட்ட வதைகளையெல்லாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடத்தப்பட்டதை வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பர். அதையே இன்று ஈழத் தமிழர்கள் மீது செயல்படுத்துகிறது சிறிலங்க அரசு.

இதையெல்லாம் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானு்ம் ஏற்றுக் கொள்ளலாம், ஏனென்றால் இந்த மூன்று நாடுகளுமே தமிழினப் படுகொலைக்கு எல்லா விதத்திலும் உதவின. ஆனால் மற்ற உலக நாடுகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற உலக நாடுகள், அதற்காக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய உலக நாடுகள், இன்று முகாம்களில் 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்படுத்தியிருப்பதை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன. இது மனித உரிமை மீறலில்லையா? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை முகாம்களில் அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொல்கிறதே சிறிலங்க அரசு, இது அவர்களை காப்பாற்றம் பொறுப்பை திட்டமிட்டே தவிர்க்கும் குற்றம் அல்லவா?

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிக்கையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் அனுமதிக்காததை அம்னெஸ்டி மட்டுமே கண்டிக்கிறதே, .நா. ஏன் வாய் திறக்கவில்லை? அந்த மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஏன் .நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவில்லை?
இது மிக ஆபத்தான மெளனம். இந்த மெளனம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் இந்த மூன்று இலட்சம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிலங்க அரசப் படைகளாலும், அங்கு நிலவும் படுமோசமான சூழலால் ஏற்படப்போகும் தொற்று நோய்களாலும் அழிந்து போவார்கள்.

அப்படி ஒன்று நிகழுமானால், இந்த உலகில் .நா.வும் (ஏற்கனவே அதுகைப்பாவை’ என்று அந்தஸ்த்துடன்தான் உள்ளது), அதன் மனித உரிமை அமைப்புகளும், அதன் அமைவிற்கு அடிப்படையான தார்மீக நெறிமுறைகளுக்கும் எந்த மரியாதையுமின்றி போய்விடும்.

இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டதுபோல, இன்றுவரை உயிருடன் இருக்கும் இம்மக்களையாவது காத்து தங்கள் தார்மீக கடமைகளை உலக நாடுகள் நிறைவேற்றட்டும்.

இங்குள்ள தலைவர்களும் அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று விவரம் தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை காப்பாற்றுமாறு குரல் கொடுக்கட்டும்.