Photobucket

19 August, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடைபெற்ற நல்லுர் கந்தன் தேர்த் திருவிழா


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலை 5:30 நிமிடத்துக்கு தொடங்கிய வசந்த மண்டபப் பூசையையடுத்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சகிதம் காலை 7:00 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார்.
வெளி வீதியைச் சுற்றிவந்த பின்னர் காலை 8:30 நிமிடமளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. பெரும் தொகையான பக்தர்கள் தேருக்குப் பின்னால் பிரதட்டை செய்ததையும் காண முடிந்தது.





தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடியார்களின் நலன்கருதி யாழ. மாநகரசபையின் சுகாதாரப் பகுதியினர் குடிநீர், மலசலகூட வசதிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆலய சுற்றாடல்கள் அனைத்தும் மங்கள தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வாழைகள் கட்டப்பட்டு தெய்வீகமயமாகக் காணப்படுகின்றது.

அனைத்து தண்ணீர்ப் பந்தல்களிலும் பக்தர்கள் தாக சாந்தி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு, இந்து இளைஞர் கழகங்கள், சாரணர் அமைப்புக்கள் என்பன இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
 
இதேவேளையில், தேர்த் திருவிழா மற்றும் தீர்த்த திருவிழாவை முன்னிட்டு குடாநாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்திருந்தது.





இந்நடைமுறைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட அதேவேளையில், இன்று புதன்கிழமையும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் பேருந்து டிப்போக்கள் ஆலய திருவிழா சேவையை அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கி நடத்தியதால் இன்று காலையிலேயே வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ள முடிந்தது.

இந்த சேவையில் ஐம்பது பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த சிறப்புச் சேவையையொட்டி முத்திரை சந்தையில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தேர், தீர்த்தம், பூங்காவன திருவிழாவின்போது நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம் உட்பட ஆறு மடாலயங்களில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளன. சகல தண்ணீர்ப் பந்தல்களிலும் நாள் முழுவதும் தாகசாந்தி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளையில் இன்று காலை இடம்பெற்ற தேர்த் திருவிழா நிகழ்வினை சமநேர காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள 24 மணிநேர தமிழ் வானொலிகள் நேரடி ஒலிபரப்புச் செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.





அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி


முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அவலத்தைத வேடிக்கை பார்த்த சர்வதேச சமுகம் இன்னும் சில தினங்களில் வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறப்போகும் ஆயிரக்கணக்கான மரணங்களையும் வேடிக்கை பார்க்கப் போகின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பா. உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியா அகதி முகாம்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ஐ.நா.வே காரணமென அரசு குற்றஞ்சாட்டுகின்றது. அப்படியானால் இந்த அரசு ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றியது.அல்லது ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வவுனியா முகாம்களில் அடைத்து வைத்தது. அல்லது ஐ.நா.விடம் அந்த முகாம்களின் பொறுப்பை ஒப்படைத்ததா? என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இனிவரப்போகும் பருவப்பெயர்ச்சி மழையின் அனர்த்தத்திலிருந்து முகாம்களிலுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகளில் அந்த மக்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது:

ஆகஸ்ட் 14 ல் பெய்த கடும் மழையினால் பல கூடாரங்களும், மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன், அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

300 க்கும் அதிகமான குடும்பங்கள் ஒன்றுகூடி வலயத்தின் பிரதான வாயிலை நோக்கி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் வன்முறைகளற்ற விதத்தில் தமது துன்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தமது எதிர்ப்பை சத்தமிட்டு வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும். முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாமல் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைமைக்கு அது இட்டுச் செல்லும் என்றும் அந்த அறிக்கைக் குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முட்கம்பி வேலியால் சூழப்பட்டுள்ள முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது விருப்பத்திற்கு மாறாக குற்றவாளிகள் போன்று அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


கே.பிக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்


அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் பயங்கரவாதி ஒருவருக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் தொடர்பில் குமரன் பத்மநாதன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.