Photobucket

28 August, 2009

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்

புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்:
புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறத
ு.

அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே வெளிநாடு;கள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத்; தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார்.
முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே.
ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான். ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர். இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம். புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம். பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது. இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது. இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது. இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன. இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

புலிகள் தமது பாரிய சண்டைப்; படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது. இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.

அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

23அடி நீளம் கொண்ட ‘அரோ’ தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

ஆதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே.

பிரபாகரன் போராளியானது ஏன்

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.