Photobucket

20 August, 2009

நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்: விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா


சரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.

இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டு களித்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கை யில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.

அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர் தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற் பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளி வீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட் டிருந்தது.

யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக் கென வைத்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர். பலாலி இரா ணுவ தலைமையகத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் தேர் வீதியில் வந்து கொண்டிருந்த போது மேல் இருந்து பூ மாரிபொழிந்து கந்தனை வழிபாடு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது

No comments:

Post a Comment