Photobucket

19 August, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடைபெற்ற நல்லுர் கந்தன் தேர்த் திருவிழா


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலை 5:30 நிமிடத்துக்கு தொடங்கிய வசந்த மண்டபப் பூசையையடுத்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சகிதம் காலை 7:00 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார்.
வெளி வீதியைச் சுற்றிவந்த பின்னர் காலை 8:30 நிமிடமளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. பெரும் தொகையான பக்தர்கள் தேருக்குப் பின்னால் பிரதட்டை செய்ததையும் காண முடிந்தது.





தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடியார்களின் நலன்கருதி யாழ. மாநகரசபையின் சுகாதாரப் பகுதியினர் குடிநீர், மலசலகூட வசதிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆலய சுற்றாடல்கள் அனைத்தும் மங்கள தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வாழைகள் கட்டப்பட்டு தெய்வீகமயமாகக் காணப்படுகின்றது.

அனைத்து தண்ணீர்ப் பந்தல்களிலும் பக்தர்கள் தாக சாந்தி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு, இந்து இளைஞர் கழகங்கள், சாரணர் அமைப்புக்கள் என்பன இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
 
இதேவேளையில், தேர்த் திருவிழா மற்றும் தீர்த்த திருவிழாவை முன்னிட்டு குடாநாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்திருந்தது.





இந்நடைமுறைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட அதேவேளையில், இன்று புதன்கிழமையும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் பேருந்து டிப்போக்கள் ஆலய திருவிழா சேவையை அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கி நடத்தியதால் இன்று காலையிலேயே வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ள முடிந்தது.

இந்த சேவையில் ஐம்பது பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த சிறப்புச் சேவையையொட்டி முத்திரை சந்தையில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தேர், தீர்த்தம், பூங்காவன திருவிழாவின்போது நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம் உட்பட ஆறு மடாலயங்களில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளன. சகல தண்ணீர்ப் பந்தல்களிலும் நாள் முழுவதும் தாகசாந்தி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளையில் இன்று காலை இடம்பெற்ற தேர்த் திருவிழா நிகழ்வினை சமநேர காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள 24 மணிநேர தமிழ் வானொலிகள் நேரடி ஒலிபரப்புச் செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment