Photobucket

01 September, 2009

புல்மோட்டை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட 3 மாதங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதகாலமாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தமது உறவினர்களைத் தேடி புல்மோட்டைக்குச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரால் கடந்த வாரம் வரையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விபரித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து புல்மோட்டைக்குச் சென்று தனது மகனைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்புவதற்கு தனக்கு மூன்று நாட்கள் தேவையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"அந்த முகாமுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருந்தது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குச் செல்வதற்கு ஒரேயொரு பேருந்துதான் உள்ளது. அதில் பயணிப்பதற்கே ஒரு நாள் சென்றது. அதன் பின்னர் முச்சக்கர வாகனம் ஒன்றில் மூன்று கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றால், மகனுடன் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எனக்குத் தரப்பட்டன" எனவும் அவர் கவலையுடன் கூறினார்.

புல்மோட்டையில் உள்ள முகாம்களிலும் மருத்துவமனையிலும் சுமார் 6 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களில் சிலர் போரின் இறுதிக்காலத்தில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களாகவுள்ள அதேவேளையில் ஏனைய சிலர் வருடக்கணக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து தனது மகனைப் பார்வையிடுவதற்காக புல்மோட்டைக்கு வந்த பெண்மணி, ஊடகங்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள முகாம்கள் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனவே தவிர, புல்மோட்டை முகாம்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

புல்மோட்டை முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் அனைத்தும் வனியாவில் உள்ள முகாம்களுக்கு மட்டுமே சென்று பார்வையிடுகின்றன எனவும் தெரிவித்த அவர், புல்மோட்டை முகாம்களுக்கு யாராவது சென்றுள்ளது பற்றி தான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் புல்மோட்டைக்கு வந்தவர்கள் கடந்த வாரம் முகாம்களில் உள்ள தமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் தனது மகனைப் பார்வையிடுதற்காக தான் சென்றபோது அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் சிலரும் புல்மோட்டையில் சிலருமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாம்களில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு கவனத்திற்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment