"இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியின்படி செப்ரெம்பர் மாதத்துக்கான தலைமைப் பதவியை றைஸ் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. |
03 September, 2009
'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்கா தீவிர அக்கறை: ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் விவாதிக்கப்படலாம்
ஈழப்போரில் காயப்பட்ட பெண்மணி தமிழகத்தில் குழந்தை பெற்றார்
கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிய... ஓடி ஒளிந்தார்கள். 2 வயது குழந்தை ஹம்சாலினியின் உடலை பதம் பார்த்தன சிங்களர்கள் வீசிய அரக்க குண்டுகள். செத்து மடிந்த ஹம்சாலினியை மடியில் போட்டுக் கொண்டு கதறி அழுதார் குண்டு காயம் அடைந்த வேலன்டினா.
வயிற்றில் இன்னொரு உயிரை சுமந்தபடி உயிர்தப்பிய வேலன்டினா ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தையைத்தான் பறிகொடுத்து விட்டோம், வயிற்றில் வளரும் குழந்தையையாவது நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
உயிர் மட்டுமே மிச்சமாகி இருந்த நிலையில் அடுத்த விமானத்தில் கணவருடன் சென்னைக்கு பறந்து வந்தார். அரும்பாக்கத்தில் இருவரும் தங்கினார்கள். வேலன்டினாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
குண்டு வீச்சில் பலியான வேலன்டினாவின் முதல் குழந்தைக்கு கடந்த மாதம் 22-ந்தேதி பிறந்தநாள். அதற்கு முந்தைய நாள் வேலன்டினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இறந்துபோன ஹம்சாலினியே மீண்டும் வந்து பிறந்திருப்பதாக பூரிப்படைந்தார்கள் காதல் தம்பதிகள்.
தற்போது சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ள இருவரும் சிகிச்சை முடிந்து மீண்டும் இலங்கைக்கே செல்வோம் என்று கூறினர்.
இலங்கையில் தமிழர்கள் படும்பாடு பற்றி சிவரூபனிடம் கேட்டோம். விரக்தியின் விளிம்புக்கே சென்றவர், எதுவும் வேண்டாம் சார் என்றார். அவரையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"
நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது"
சிங்களப் பேரினவாத பேய்கள்
உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".
சகோதர இயக்கங்களிடையே மோதல்!

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.
இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:
""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.
ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.
ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.
""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''
""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''
""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''
""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''
""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''
""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,
""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?
அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.
இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.
பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.
விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:
""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம்.
தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''
இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.
மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.
இதன் பின்னணி என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.
இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்
(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).
இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.
இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்
02 September, 2009
மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை –என்ன செய்யப்போகிறோம்?
நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில் மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன்நடந்தேறியது. இனியும்தொடரும்.
இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.
இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை.
இது இப்படியிருக்க,சிறிலங்கா பாசிச ராணுவ அரசின் திரைமறைவு படுகொலை
அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.
உலகெங்கிலும் இதுவரை நிகழ்ந்திராத கேவலமான போர்க்குற்றங்களை புரிந்த
“சிறிலங்கா இன அழிப்பு இராணுவம்” இப்போது “பயங்கரவாதத்தை” எப்படி
ஒழிப்பது என்று உலகின் சில வல்லாதிக்க ராணுவங்களுக்கு பாடம்
நடத்துகிறது.
சாத்தான் வேதம் ஓதுகிறது.
சிறிலங்கா பாசிச ராணுவக்கும்பலோடு கைகோர்த்து “தமிழினப்படுகொலை” புரிந்த உலக வல்லாதிக்க சண்டியர்கள் சில இப்போது “உலக மனித நேய குரல்களின்” கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் வாய்பொத்தி நிற்கிறது.
மூன்று சகாப்தங்களுக்கு மேலாக தன் “சுயநிர்ணய” உரிமைக்காக போராடிய இனத்தினை முற்றாக சிதைத்து விட்டு “பயங்கரவாதத்தினை” ஒழித்துவிட்டதாய் சிங்கள தேசம் வேற்றிக்களியாட்டம் போடுகிறது.
தமிழனின் “இரத்த ஆற்றில்” தலை முழுகி சீவிச் சிங்காரிக்கிறது சிங்களம்.
உலக வல்லாதிக்கம் இதை வேடிக்கை பார்க்கிறது.இதே கதி ஒரு வெள்ளையினத்துக்கு நிகழ்ந்திருப்பின் என்ன நடந்திருக்கும்?
உலக மனித நேய அமைப்புக்கள் கத்திக் குழறியிருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் செய்து உடனடியாக நடவைக்கை எடுத்திருக்கும்.
சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்திருக்கும்.
ஒபாமா ஒப்பாரி வைத்திருப்பார். இந்தியா அமைத்திப்படை அனுப்பியிருக்கும்.
இது ஒன்றும் பாவப்பட்ட தமிழனுக்காய் நிகழவில்லையே இன்னும்.
ஏன்? ஏன்? ஏன்?
ஏனெனில் ஈழத்தமிழன் ஒரு இனம் இல்லை.
ஈழத்தமிழனுக்கு உணர்வுகள் இல்லை.
ஈழத்தமிழன் சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடாது.
ஈழத்தமிழனுக்கு இனமான உணர்வு இருக்கக்கூடாது.
மொத்ததில் அவன் அவன் மனிதனே இல்லை.
அவன் மிருகங்களை விட கேவலமான பிறவி.
அவன் சபிக்கப்பட்ட பாவப்பட்ட எந்தவித மனித உணர்வுகளும் இல்லாத மரக்கட்டைகள்.
ஒருகாலத்தில் இந்த சபிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சியை,
அதன் விடுதலை உணர்வை அதன் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தினை பார்த்து இந்த உலகம் வியந்திருக்கிறது.
குறுகிய காலத்தில் உலகில்எந்தஇனத்திலும்,விடுதலைப்போராடாட்டத்திலும்
கண்டிராத அதீத வளர்ச்சியை இந்த “ஈழத்தமிழனினம்” கண்டபோது மூக்கில் விரலை வைத்த காலமும் இருந்தது.
ஈழத்தமிழனின் “தமிழீழம்” மலர்ந்தால் அதுதான் இந்த உலகில் உள்ள
ஆட்சியாளர்களுக்கும்,நாடுகளுக்கும்,ஆட்சியமைப்புக்கும்,கட்டுமானங்களுக்கும்,போரியல்
தொழில்னுட்பங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று மேற்கத்தையவன் பெருமூச்சுவிட்டான்.
அதுவே வினையானது.
தன்னைவிட தம் இனத்தினை விட “தமிழன்” என்ற ஒரு இனம் தலைதூக்குமாக இருந்தால்
எதிர்காலத்தில் தங்களின் வல்லதிக்க சண்டித்தனக்களுக்கு ஆப்பு வைப்பான் தமிழன் என்று கணக்குப்போட்டார்கள். முதலில் மூக்கு வேர்த்தது பாழாய்ப்போன பாரத தேசத்துக்கு.
அவர்களின் “பிராந்திய நலனுக்கு கேடு” என்ற கேவலமான சிந்தனையின்
அடிப்படையில் சிங்களதேசத்தோடு கைகோர்த்தார்கள்.
இதற்கு தமிழனின் வளர்ச்சி கண்டு வயிறெரிந்த மேற்கத்திய வல்லாதிக்க சதிகளோடு கூட்டுச்சேர்ந்தார்கள்.இவையெல்லாம் திரைமறைவில் நடந்தேறியது.
வெல்வதே குறிக்கோள் எனக் கூட்டுச்சேர்ந்த கும்பல்களுக்கு தமிழனின்
உரிமைக்குரலோ இல்லை அவனது உயிர்களோ கண்களுக்கு தெரியவில்லை.
கொன்று குவிப்பதே அவர்களின் குறிக்கோள்.இது இப்போது மனித நேயம் பற்றிப்பேசும் அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெளிவாகத்தெரியும்.
ஆனால் உலக மக்களுக்கு இந்த “இனப்படுகொலை” நாடகத்தின் உண்மை வடிவம் தெரியவே தெரியாது. அதுவே உண்மை.
புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வடிவங்கள் அவர்களுக்கு கொஞ்சம் புரியவைத்திருக்கும். அதுவும் சில தவறான வழிகாட்டல்களால் சொல்லப்பட வேண்டிய விசயங்கள் மழுங்கடிக்கப்பட்டது.
அது தமிழினத்தின் சாபக்கேடான உண்மை. ஆனால் அது இப்போது தெளிவாக
உணரப்பட்டிருக்கிறது.
நடு வீதியில் நாய் செத்தால் நாலுபக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கும் மேற்கத்திய மனித நேய கனவான்களுக்கு “தமிழினத்தின் அவலம்”கண்களுக்கு தெரியாது.
ஒரு மிருகத்துக்கு காட்டும் பரிவு கூட நம் இனத்துக்கு இல்லை.அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றான விடயம். இதுதான் யதார்த்தம்.
ஆனால் சாதாரண “மனிதநேயம்” கொண்ட மக்களுக்கு அவர்களின் நிலையில் இருந்து விளங்கப்படுத்தினால் எம் நிலை புரியும்.
இன்று எல்லோராலும் கைவிடப்பட்ட ஈனப்பிறவிகள் ஆனது “ஈழத்தமிழினம்”.
சகாப்தங்களாய் வலி சுமந்து ரணப்பட்டு விடுதலை பெற்ற இனங்களுக்கு கூட எம்
இனத்தின் அவலங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.
அழிவுகளை கடந்து வலிகளைச்சுமந்து விடுதலைபெற்ற இனத்தினால்த்தான் இன்னொரு இனத்தின் விடுதலை உணர்வை இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.
பஞ்சு மெத்தைகளிலும்,பகட்டு வாழ்க்கையிலும்,குளிர் அறைகளிலும் துயில் கொள்ளும் “மனித நேய கனவான்களுக்கு” ஈழத்தமிழனின் வலியை உணரமுடியாது.
அவர்களுக்கு அறிக்கை அனுப்புவதிலோ, இல்லை எடுத்துச்சொல்வதிலோ எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இது கடந்த காலத்தின் ஊடான யதார்த்தம்.
எப்போது நமக்காக இந்த உலகில் போராடி விடுதலை பெற்ற ஒரு இனம்,
ஈழத்தமிழனுக்காய் ஆத்மார்த்தமாக குரல் கொடுக்கிறதோ அன்றுதான் எங்களின்
“வலிகள்”,”விடுதலை வேட்கை”,”சுயநிர்ணய உரிமை” இந்த உலகுக்கு
தெரியப்படுத்தப்படும்.நியாயப்படுத்தப்படும்.
அதுவரை சிங்கள வெறியாட்டம் தொடரும் பாரத தேசத்தின் பரிவோடு.
இரத்த ஆறு ஈழ மண்ணில் ஓடிய போது,புலம்பெயர் தமிழன் வீதியில் இறங்கி
உலகின் மனச்சாட்சிகளை ஓங்கித்தட்டினான்.உலகின் மனித நேய மையத்தின்
வாசலில் தீக்குழித்தான் தமிழன்.பட்டினியிருந்து கெஞ்சி மண்ணாடினான்.
பாரத தேசத்தில் பார்க்கும் இடமெல்லாம் பற்றியெரிந்தார்கள் தமிழக
சகோதரர்கள்.ஓயாது குரல் கொடுத்தோம்.என்ன நடந்தது.எதுவுமே இல்லை.
தமிழகத்தினை நம்பியிருந்தோம் என்று சொல்வதை விட நம்மில் சிலர்
தமிழகத்தின் தறுதலை அரசியல் வாதிகளை நம்பியிருந்தோம் என்று சொன்னால் சரியாகவிருக்கும்.நம்பிக்கெட்டதுதான் மிச்சம்.
பதவிக்கும் பகட்டுக்கும் கதிரைக்கும் ஆட்சி செய்யும் பரதேசிகள் உள்ளவரை எல்லாம் பகற்கனவே.
படையைத்திரட்டி “தமிழீழம்” அமைப்போம் என்று கூவியது எல்லாம் பொய்வேசம்.
ஒரு நேர உணவு விடுத்து “உண்ணாவிரதம்” இருந்தது ஒரு கருங்காலி.இப்படிப்பலவற்றை ஞாபகப்படுத்தலாம்.
ஆனால் அடிமட்ட தமிழக உறவுகள் இபோதும் உணர்வோடுதான் இருக்கிறார்கள்.இல்லையென்றால் எமக்காக பதினைந்து உறவுகள் உயிர்கருகி இருப்பார்களா?
ஆனால் இன்று அவர்களின் சிந்தனைகளையும் செயல்களையும் இந்த அரசியல் பரதேசிகள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.உண்மையில் “ஈழத்தமிழனுக்காய்” குரல் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சக்தி,ஒரேஒரு இனம் “தமிழக உறவுகள்” தான்.
ஆனால் தூரதிஸ்ட வசமாக இப்போதும் அவர்கள் மெளனமாகவே இருக்கிறார்கள்.
தன் உடன் பிறந்த உறவுகளுக்காக ,இனத்துக்காக குரல் கொடுக்காமல் ஆறு கோடி தமிழனும் வேடிக்கை பார்க்கும்போது வெள்ளைக்காரன் வந்துதான் விடுதலை பெற்றுத்தருவான் என நினைப்பது கேவலமே.
தன் உறவுகளுக்காய் வலி சுமந்து வீறுகொண்டு எழுந்த இன்னொரு பெரிய சக்தி
“புலம்பெயர் ஈழத்தமிழினமும்” ஆறு கோடியோடு ஒரு கோடியாக உறங்கிக்கிடப்பது கேவலமானது.
வெற்றிகளையே கண்டு பழகிப்போன நமக்கு சில பின்னடைவுகளும் தோல்விகளும் இழப்புகளும் மனம் சோரவைத்துவிட்டது.
சில நிகழ்வுகளையும்,அழிவுகலையும் சாதாரணமாய் ஜீரணிக்கமுடிவில்லை.முடியும்,நடக்கும்,அடைந்துவிடுவோம் என்ற
மனனிலையோடு போராடிய “புலம்பெயர் தமிழினம்” இன்று
துவண்டுபோய்க்கிடக்கிறது.
கடந்த காலங்களை பற்றி அலசி ஆராய்வதிலும்,தோல்விகளுக்கான காரணங்களை கண்டு பிடிப்பதிலும்,அவற்றை யார் தலையில் வைக்கலாம் என்ற கண்டுபிடிப்புகளிலும் காலம் போய்க்கொண்டிருக்கிறது.
வீணான விவாதங்களிலும்,வேண்டாத ஆராய்ச்சிகளாலும் கைகளில் இருந்தவற்றையும் களவுகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
தேவையான பொழுதுகளில் குரல் கொடுத்த நாம் இப்போது அதைவிட ஆயிரம் மடங்கு தேவை உள்ளபோது அமைதியாய் இருப்பது அவமானம்.நாளை வரலாறு கேவலமான இனமாக எம்மை பதிவு செய்யும்.
எங்கள் உறவுகளின் கண்கள் கட்டப்பட்டுள்ளது.
அவர்களின் நாக்குகள் அறுக்கப்பட்டுவிட்டது.
அவர்களின் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்படுள்ளார்கள்.
அவர்களின் கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்டுவிட்டன.
அவர்களின் பிடரிவளியே துப்பாக்கி ரவை துளைத்து குருதி கொப்பளிக்கிறது.
என் தங்கையின் மார்புகள் அறுக்கப்பட்டு விட்டன.
என் தம்பியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது.
என் தாயின் கற்பு களவாடப்பட்டு விட்டது.
என் தந்தையின் தலை அறுக்கப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் பார்த்தும் இன்னும் நாம் வாய்பேசாமல் இருந்தால், இந்த உலகம்
சொல்வது போல அவர்கள் நினைப்பது போல “ஈழத்தமிழினம்” என்பது ஒரு மனித இனமே இல்லை.ஆகக்குறைந்தது ஜீவ காருண்யம் காட்ட “மிருக இனம்” கூட இல்லை.
ஆதலால் முதலில் எமக்குள்ளே சில முடிவுகளை திடமாய் எடுப்போம்.”புலம் பெயர் தமிழினம்” ஒன்று படவேண்டும் என்கிற கூக்குரலை நிறுத்தி ஒன்றுபட்டிருக்கும் தமிழன் திடமாய் நடந்தால் அவர்களின் வழிதொடர ஆயிரம் பேர் வருவார்கள்.
இன்று ஒவ்வொரு நாடுகளிலும் “தமிழர் பேரவை” என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.இப்போது அது பலமான ஒரு சக்தியாக பரிணமித்திருக்க வேண்டும்.ஆனால் இப்போதும் முளைவிட்ட விதையாக இருப்பது வேதனை.தமிழினத்துக்கு நேர்ந்திருக்கும் சோதனை.
இந்த நிலை மாறவேண்டும்.ஒன்றுபடுவதுக்கு ஒன்பது மாதங்கள் வேண்டுமெனில் ஒரு உயிர்களையும் காப்பாற்ற முடியாது.முதலில் நாம் எங்களின் மனச்சாட்சிகளை தட்டி திறவுங்கள்.
அதன் பின் உலகத்தின் மனக்கதவுகளை உரிமையோடு தட்டுவோம்.
உன்னைத்திருத்திக்கொள். உலகம் தானாகவே திருந்தும்.
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!
எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.
ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.
கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.
அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.
ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.
சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.
ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர்தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத்தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.
திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் "பயங்கரவாதம்" என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் "பயங்கரவாதிகள்" இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் "விடுதலைப் போராளிகள்" என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க... சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு. இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும். இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!
உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.
ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.
உறவுகளே! உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதையும் நாம் தவற விடுவோமானால் "நான் தமிழன்" என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.
இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும். உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!
துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!
உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !
இறுதிவரை... போராடுவோம்!
தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும்வரைக்கும்... இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும்வரைக்கும்... நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!
இறுதியில்.... வெற்றி எமக்கே!
வவுனியா முகாம் மர்மம்: 15 ஆயிரம் பேரின் கதி என்ன?
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து 15 ஆயிரம் பேர் காணாமல் போய் இருக்கிறார்கள் என வவுனியா மாவட்ட செயலர் சார்ள்ஸ் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.இதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளனர். காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், அந்தப் பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்ட பொதுமக்களை படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.
இதன் பின்னர் 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் சண்டை இடம்பெற்றபோதே பெருமளவிலான மக்கள் வந்தனர். எனினும் தரைப்படையின் பதிவுகளின்படி 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களே வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதராகவும் இந்தப் புள்ளி விபரங்களையே வெளியிட்டிருந்தது.
சிங்கள தரைப்படையின் முன்னாள் தளபதி சரத் பொன்சோ, முன்பொரு சமயம் ஊடகங்களிடம் பேசும்போது, முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.
ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்த 10 ஆயிரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கு மேலதிகமாகவே இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டது.
முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை விபரம் கடந்த மாதம் கணக்கிடப்பட்டது. அப்போது 10 ஆயிரம் பேர் குறைவது தெரியவந்தது.
இந்த விசயம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பாக வவுனியா மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.எம்.சார்ள்ஸ் மூலமாக வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்டது.
இது தொடர்பில் கருத்துக்களை அறிந்துகொள்ள மாவட்ட செயலருடன் தொடர்புகொண்ட போது அவர் நாட்டிற்கு வெளியே சென்றுள்ளார் எனக் கூறப்பட்டது.
எனினும், பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் குறைவதற்கான காரணம் என்ன என்பதையிட்டு உறுதியாகக் கூறமுடியாது உள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத, செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மைய கணக்கெடுப்பு அரசின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தக் கணக்கெடுப்பின்படி முகாம்களில் தற்போது 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்கள்படி முகாம்களில் இருந்து மக்கள் திடீரென வெளியேறியதனாலேயே புள்ளிவிபரங்களில் இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படிப் பார்த்தால், இதுவரையில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வரையிலான மக்கள் வெளியேறி இருக்க வேண்டும். இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்கு உரியதே.
அதிலும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் முகாம்களில் இருந்து மருத்துவத் தேவைகளுக்காகக்கூட வெளியே செல்வதற்கு பெருமளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முகாம்களில் இருந்து மக்கள் தப்பிச் செல்கிறார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததை அடுத்து முகாமின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமளவில் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 70 முதல் 80 நாட்களுக்குள்ளேயே 15 ஆயிரம் பேரும் காணாமல் போயிருக்க வேண்டும். அப்படியாயின் நாள் ஒன்றிற்கு 180 முதல் 200 பேர் தப்பிச் சென்றிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமானது அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே முகாமில் இருந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.
இந்தப் பகை சுழ்ந்த உலகத்தில் ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது, சாகவும் முடியாது.
GTV தொலைக்காட்சியின் ஆய்வகத்தில் யூலைமாதம் ஒலிபரப்பான நிகழச்சியின் சாரம்.
"ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். "
ஒரு தேசம் என்னும்போது அதற்கு ஒரு பெயர், பிரதேசம், இதிகாசங்கள், வரலாற்று ஞாபகங்கள், கலாசாரம், பொருளாதாரம், கடமைகளும் உரிமைகளும் எனப் பட்டியல் இடலாம். இவற்றை தாங்கி நிற்க, பகிர்ந்துகொள்ள மொழி உதவுகிறது.
ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது என்ற கருத்தை 1772 இல் யேர்மனிய தத்துவாசிரியரான ஜோஹன் ஹொற்பிறைட் ஹேடர் (Johann Gottfried Herder ) முன்வைத்தார்.
எம் முந்தையரின் அரிய சாதனைகளை வெளிப்படுத்தும் வரலாற்றையும் கவிதையையும் மொழியின் ஊடாகவே கொண்டாடுகின்றோம் என்கிறார் இவர். இவரின் சகபாடியான வில்ஹெலம் வொன் ஹம்போல்ட் ( Wilhelm von Humboldt ) என்பார் மொழி ஒரு தேசத்தின் ஆன்மீக வெளிமூச்சு, அதன் மொழியே அதன் ஆத்மா அந்த ஆத்மாவே அதன் மொழி என்கிறார். இவர்களது சமகாலத்தவரான ஜோஹன் கொற்லிப் பிசற் ( Johann Gottlieb Fichte )
' மனிதர்கள் மொழியால் வடிவமைக்கப்படுதல் மனிதர்களால் மொழி வடிவமைக்கப்படுவதிலும் மிகவும் அதிகமாகும் "
“Men are formed by language far more than language is formed by men”
என்கிறார்.
இவர்கள் யாவரும் யேர்மன் மொழி மற்றைய மொழிகளைவிட உயர்வானது என்ற கருத்துருவாக்கத்தின் தளத்தில் நின்று மொழியை தேசியத்துடன் இணைத்தனர்.
அதன் வழி ஜேர்மன் தேசமும் அதன் மொழியும் மேலானது என்ற வெறி இவர்களிடம் காணப்பட்டது.
இதில் பிரன்சுக்காரரும் சளைத்தவர்ககள் அல்லர். இக்காலத்தில் Maurras Limoge போன்ற தத்துவாசிரியர்கள் பிரான்சிய மொழியே ஜரோப்பிய கலாசாரத்தின் வனப்புக்களை வெளிப்படுத்துகிறது என்றனர்.
மொழித் தூய்மையை வற்புறுத்திய இவர்களது கருத்தாக்கம் நின்று நிலைக்கவில்லை என்பது வரலாறு. இந்த வகையான தூய்மைவாதிகளின் கருத்துக்கள் தேசிய வாதத்தின் அசிங்கமான பக்கங்களாகப் பார்க்கப்படுகிறது.
இன்று அரசு என்ற அங்கீகாரத்துடன் 192 நாடுகள் மட்டில் ஜக்கிய நாடுகள் தாபனத்தில் அங்கம் வகித்தபோதும் இந்த நாடுகளில் 3000 க்கும் அதிகமான தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேசிய இனங்கள் யாவும் தமக்கான தனித்துவமான மொழியைக் கொண்டிருக்கவில்லை. அந்தச் சமயங்களில் அவர்களது தேசியத்தின் வெளிப்பாடாக மொழி தவிர்ந்த வேறு பண்புகள் முதன்மை பெறுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலேயிருந்து வைகையேட்டிலே தவழ்ந்தபேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன
மருப்பிலே பயின்றபாவை மருங்கிலே வளருகின்றாள்
தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்.
அதாவது தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல அதற்கு மேலாக அதன் தொடர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்.
நீண்ட தொடர்ச்சியான வரலாற்றில் தமிழின் பெருமையை பலரும் போற்றியபோதும் அது தமிழ் வெறியாக இருக்கவில்லை.
' நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரனும்,
' வையகவரைப்பில் தமிழகம் கேட்ப" பாடிய சங்கப் புலவனும்,
' என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற திருமூலதேவனாரும்,
' மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ ,உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்" எனப் புறப்பட்ட கலகக்காரனான கம்பனும்,
' இமிழ் மடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய இது கருதினையாயின்" எனச் சிலம்பு இசைத்த இளங்கோ அடிகளாரும்,
' தமிழோடு இசைபாடல் மறந்தறியாத" நாவுக்கரசரும்,
' தென்னவன் சேரன், சோழன், திருப்புயங்கள் வர" கூவ குயிலை அழைத்த மாணிக்கவாசகரும்
'அன்றைக்கன்றென்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசன்" எனக் கரையும் நம்மாழ்வாரும்,
'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதிர்த்து எழுந்தே ஓன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே " என வியக்கும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும்,
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் " என உறுதிகொள்ளும் பாரதியும்
தமிழை:
சத்தியத்தின், ஞாயத்தின், அன்பின், வீரத்தின், பக்தியின் வெளிப்பாடாகத் தமிழ் செய்த வாழ்வின் காட்சிக் கோலங்களையே காட்டிநிற்கின்றனர்.
இந்தித் திணிப்பும், சிங்களத் திணிப்பும் ஏற்பட்டபோதே பாரதிதாசன்களும், காசியானந்தன்களும் கவிவெறிகொண்டனர்.
சிங்களமொழித் திணிப்பு இடம் பெற்றபோது சிங்கள பாராளுமன்றத்தில் 1955 இல் பேசிய கலாநிதி என்.எம். பெரேரா இந்த அடக்குமுறைகளால் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு மாநிலமாகப் பிரிந்து இந்தியாவுடன் இணைந்து கொள்வர் என எச்சரித்திருந்தார்.
பாரத நாட்டைப் பல தேசங்களின் கூட்டாகக் கண்ட பாரதி சிங்களதேசத்திற்கும் பாலம் அமைப்போம் என்றான்.
இன்று தமிழ் ஈழத்தில் தமிழ் மக்களின் தேசியத்தை வென்று எடுப்பதற்கான ஆயுதப்போராட்டம் தோற்கடிகப்பட்டுள்ளது. இதில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
எஞ்சியோர் வதை முகாங்களில் நாளுநாள் சாகடிக்கப்படுகின்றனர்.
சகிப்புத் தன்மை அற்ற சிங்களப் பெரும்பான்மைத் தேசியத்தின் இந்த நிலையை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான அல்பேட் அயன்ஸ்ரயனின் வார்தைகளில் கூறுவது பொருத்தமாகும்.
" இந்தப் பகை சுழ்ந்த உலகத்தில் ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது, சாகவும் முடியாது. இந்தச் சமுதாய நோக்கை தேசியம் என்று அழைக்கலாம். அது என்னவாகிலும் அதன் நோக்கம் அதிகாரம் அல்ல. அதன் நோக்கம் தன்மானமும் நல்வாழ்வுமே. சகிப்புத் தன்மை இன்றியும், குறுகிய மனப்பான்மை கொண்டும், அத்தோடு வன்முறையை கையாளுபவர்களுமான மக்களிடையே நாம் வாழாது இருக்க முடியுமானால் உலகு தழுவிய மனிதத்திற்காக எல்லாத் தேசியங்களையும் தூக்கி வீசுவதில் நான் முன்னிற்பேன். ஜேர்மன் அரசில் யூதர்களாகிய நாம் தகமை வாய்ந்த பிரசைகளாக இருக்கமுடியாது என்ற ஆட்சேபனை அரசு என்பதன் இயல்பு பற்றிய தவறான புரிதலால் ஏற்படுவதாகும். தேசிய பெரும்பான்மையினரிடம் சகிப்புத்தன்மை இன்மையால் அது ஏற்படுகிறது. அந்த சகித்துக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் நாங்கள் எம்மை ஒரு மக்கள் என்று கூறினாலும்சரி கூறாவிட்டாலும்சரி நாம் ஒருபோதும் பாதுகாப்பாக
இருக்கமுடியாது "
" a communal purpose without which we can neither live nor die in this hostile world can always be called by that ugly word (nationalism). In any case it is a nationalism whose aim is not power but dignity and health. If we did not have to live among intolerant, narrow-minded, and violent people, I should be the first to throw over all nationalism in favor of universal humanity. The objection that we Jews cannot be proper citizens of the German state, for example, if we want to be a 'nation' is based on a misunderstanding of the nature of the state which springs from the intolerance of national majorities. Against that intolerance we shall never be safe, whether we call ourselves a people (or nation) or not..."
Sivakumaran Statute in Urumpirai, 2004
என அவர் கூறினார். தமிழ் மக்கள் தம் மொழிக்கு விழா எடுப்பதைக்கூட சகித்துக் கொள்ளாத சிங்களத்தேசியம் 1974 இல் சிவகுமாரனை உருவாக்கிய வரலாறு தமிழ்த் தேசியத்தில் மொழியின் ஆழத்தைப் புலப்படுத்தப் போதுமானது. யாழ்நூலகம் மீதான தீ வைப்பும் மொழி தாங்கி நிற்கும் வரலாற்று ஞாபகங்ளை அழிக்கும் முயற்சியே.
ஆக்கிரமிப்புக்களாலும், பிறமொழி ஆதிக்கத்தாலும் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. அழிக்கப்பட்டு வருகின்றன.
" ஒரு சமுதாயத்தின் கடைசி அவகேடு, அதிகாரம் பெருமை இவற்றை இழப்பதன்று. பொதுநல வாழ்விற்கு அவசியமான சுதந்திரத்தை இழப்பதுகூட அன்று. தனது நாட்டில் அன்னியன் புகை படர்வது, அல்லது சுதேசிகள் பதமிழந்து அனாதைகளாகி அலறி ஓடுவது, புதியவர்கள் ஆதிக்கம் செலுத்துவது ஆகிய அலங்கோலக் காட்சிகள் மிகக் கொடுமையானவையே. இவ்வாறு நாடு இழப்பதுகூட ஒரு பொருட்டன்று. தாய்மொழிச் செல்வம் மெல்ல மெல்க அழிவதே இறுதியான பெருந்துயர நாடகமாகும். ......................... தாய்மொழியை இழந்த ஒரு சமுதாயம் தனது பண்டைத் தொடர்பற்று அடிமைப்புத்தி பிடித்துக் கெடுகிறது "
என்கிறார் பறக்கும்விதியின் ஆசிரியரான ஸ்கொட்லாந்தைச் சார்ந்த வில்லியம் சாப். இவர் கூறும் அவலமான, அலங்கோலமான நிலையில் உள்ள தமிழீழ மக்களின் துயரங்கள் கூட்டான வேதனையையும் அதன் ஊடாக கூட்டான கடமைகளையும் கூட்டான முயற்சிகளையும் வேண்டிநிற்கிறது.
பறக்கும்விதியின் ஆசிரியர் கூறிய அவலத்தை ஸ்கொட்லாந்து மக்கள் அனுபவிக்கவில்லை. ஆனால் அவர்கள் மொழி இன்று அங்கு எல்லோராலும் பேசப்படுவதில்லை. அவர்களின் தேசியக் கவி எனப் போற்றப்படும் றொபேட் பேன்ஸ்கூட (Robert Burns ) பெரும்பான்மையான படைப்புக்களை ஆங்கிலத்திலேயே படைத்துள்ளார்.
இதே கதிதான் அயர்லாந்து மொழிக்கும். அயர்லாந்தின் தேசியக் கவிஞர்களான தொமஸ் மூர் ( Thomas Moore ) ஜேட்ஸ் (Yeats ) என்போரின் ஆக்கங்களும் ஆங்கில மொழியில்தான்.
இன்று அயர்லாந்தில் ஹெல்ரிக் மொழியே முதல் உத்தியோக மொழியாக இருந்தபோதும் அதனைப் பேசுவோர் சொற்ப வீதத்தினரே. ஒரு காலத்தில் அயர்லாந்தின் ஒரு கரையில் இருந்து மற்றக்கரை மட்டும் ஹெல்ரிக் மொழியையே பேசினார்கள். ஆனால் வைக்கிங்ஸ், நோமன்ஸ். ஆங்கிலேயர் என இடம் பெற்ற தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், 1840 இல் இடம் பெற்ற கொடிய உருளைக்கிழங்குப் பஞ்சம், தொடர்ந்து பெருமளவில் நாட்டைவிட்டு அமெரிக்கா அவுஸ்திரேலியா எனக் குடியேறியமை இவர்கள் மொழியின் தேய்விற்கு வித்திட்டது என்பர். அயர்லாந்தின் முதல் பிரதமரும் ஜனாதிபதியுமான டி வலறா ,
" எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையது. எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது.
அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளத
" For many the pursuit of the material life is a necessity. Man to express himself fully and to make the best use of the talents God has given him, needs a certain minimum of comfort and wealth. A section of our people have not yet this minimum. They rightly strive to secure it and it must be our aim and the aim of all who are just and wise to assist in that effort. But many have got more than is required and are free, if they choose, to devote themselves more completely to cultivating the things of the mind and, in particular, those that make us out as a distinct nation.
The first of these latter is the national language. It is for us what no other language can be. It is our very own. It is more than a symbol, it is an essential part of our nationhood. It has been moulded by the thought of a hundred generations of our forebearers. In it is stored the accumulated experience of a people - our people who, even before Christianity was brought to them, were already cultured and living in a well ordered society.
The Irish language spoken in Ireland today is the direct descendant without break of the language our ancestors spoke in those far off days. A vessel for three thousand years of our history, the language is for us precious beyond measure. As the bearer to us of a philosophy, of an outlook on life deeply Christian and rich in practical wisdom, the language today is worth far too much to dream of letting it go.
To part with it would be to abandon a great part of ourselves, to loose the key to our past, to cut away the roots from the tree. With the language gone we could never again aspire to being more than half a nation."
என்றார்.
அவர்காலத்திலேயே ஹேலிக் மொழி அவர்கள் அரசியல் யாப்பிலும் அரச நிர்வாகத்திலும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றபோதும் அவை ஏட்டில் மட்டுமே நின்று விட்ட பரிதாப நிலை அந்த மொழிக்கு. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் தேய்ந்தபோதும் தமிழ் மக்கள் ஏதிலிகளாகியபோதும் அவர்கள் தேசியத்தில் மொழியின் ஆற்றல் அற்புதமானதாகும்.
ஸ்கொட்லாந்து அயர்லாந்து மக்களின் கதை இதுவாகின் நாட்டோடு தொலைத்த மொழியையும் மீட்டெடுத்த வரலாறு யூதமக்களின் கதையாகும்.
எகிப்தியர், பாரசீகர், உரோமர், ஒட்டமன், ஆங்கிலேயர் எனப் பலராலும் அடிமைப்படுத்தப்பட்டு 2000 ஆண்டுகளாகப் பரதேசிகளாக வாழந்த யூதமக்கள், நச்சுவாயு கிடங்குகளிலும், வதை முகாங்களிலும் பலிபோன யூதமக்கள் , உலக வழக்கொழிந்து இருந்த தம் மொழியை மீட்டு இஸ்றேல் நாட்டின் மொழியாக அரியாசனம் ஏற்றிய வரலாறு அற்புதமானது.
இடையறாத மனித முயற்சியின் வெற்றி வரலாறு அது.
ஆயிரம் ஆண்டுகாலமாக சமய அனுட்டானங்களில் மாத்திரம் சிலரால் பேணப்பட்ட ஹீபுறு மொழியை 1858 க்கும் 1922 க்கும் இடையே வாழ்ந்த எலியேசர் பேன் யெகுடா ( Eliezer Ben Yehuda ) என்னும் தனிமனிதன் தலமையில் மீட்டெடுத்தனர்.
இவரின் மகனே 1700 ஆண்டுகளின் பின்னர் முதன்முதல் ஹீபுறு மொழியில் தன் முதல் வார்த்தையை உச்சரித்தார் என்று கூறுவார்கள். தியோடர் ஹேல் யூததேசியத்தின் தந்தை எனின் அந்த தேசியத்தின் மொழிப் பண்பிற்கு Eliezer Ben Yehuda வை தந்தை என்பர்.
இன்று பல மொழிகள் எம் கண்முன்னே அழிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். யேசநாதர் பேசிய அராமிக் மொழி இன்று வழக்கில் இல்லை. எழுத்தையும் நாகரிகத்தையும், நகரத்தையும் தந்த பபிலோனிய நாகரிகம் கண்ட மொழிகள் இன்று இல்லை. இலக்கிய தத்துவ வழம்கொண்ட சமஸ்கிருதம் லத்தீன் என்பன பேச்சு வழக்கில் இல்லை. இலங்கைத் தீவுவரை கரைதட்டிய பிராகிருத மொழியும் இன்றில்லை.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 200 மொழிகளே இன்று உள்ளன என்பர். 100 மில்லியனுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகளாக 12 மொழிகள் உள்ளன. உலகவர்த்தக சாம்ராச்சியம், உலகமயமாக்கல் என்னும் சுஸ்ரீறாவளியில் பல மொழிகள் இரையாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
இத்தகையதொரு பின்புலத்தில் தமிழ்த் தேசியத்தில் தமிழ் மொழியின் பங்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை ஊகிக்கலாம். மொழிதழுவிய தேசியத்திற்கு ஒரு நாடு வேண்டும். அந்தநாடு தமிழ்கூறும் நல்உலகு. தமிழ்த்தேசியம் இந்தத் தமிழ்கூறும் நல் உலகைத் தழுவி உள்வாங்கப்படும்போதே இது சாத்தியமாகும்.
மொழியே இதற்கான பிணைப்பாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக எம், முந்தையர் உள்ளங்களிலும் அவர்தம் சிந்தனைகளிலும் செப்பனிடப்பட்ட மொழியே தமிழ்.
முள்ளிவாயக்காலில் சிங்கள அரசின் படைகளுடன் கைகோத்த பிராந்திய வல்லரசு, சீன வல்லரசு, அமெரிக்க வல்லரசு எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ் மக்களை அகதிகளாக்கி வவனியா மனிக்பாமில் வதைக்கின்றபோது கேட்கும் அவலக்குரலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளான பாரி மகளிரின்
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றெறி முரசர் எம் குன்றம் கொண்டார்
யாம் எந்தையும் இலமே
என்ற குரலையும் கேட்க தமிழ் மொழியே வழி சமைக்கின்றது. இந்தச் சோகம் காப்பிய பரிமாணம் பெற்று எம்மை வதைக்கவும் அந்த வதையிலும் உறுதிபெற தமிழ் சுமந்து நிற்கும் எம் முன்னோர் வரலாறும் அவர்தம் அனுபவங்களும் எமக்கு ஒத்தணமாகிறது.
அதில் ஒரு சக்தி பிறக்கிறது. இந்த சக்தி தொடர்ச்சியான ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு.
கண்ணதாசனின் பாடல்களில் பாரதியை, கம்பனை, வள்ளுவனை தரிசிக்கின்றோம். பாரதியில் கம்பனின், ஆழ்வார்களின் குரல்களைக் கேட்கின்றோம். கம்பனில் நம்ஆழ்வாரைத் தரிசிக்கின்றோம். நெஞ்சை அள்ளும் சிலம்பில், வள்ளுவனின் சொல் ஓவியங்களையும் சங்கப் புலவர்களின் மொழி ஆழுமையையும் காண்கிறோம்.
வள்ளுவனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனை, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்ற ஒவையை, அவனின் காமத்துப் பாலில் சங்க அகத்திணையின் சாரத்தை ரசிக்கின்றோம்.
இந்த பழமையான இலக்கியங்களுக்கு ஊடாக நாம் செய்யும் யாத்திரையில் எம்மையும் கண்டு அறிகின்றோம்.
நாம் இந்த கண்டு பிடிப்பை கிரேக்க,ரோம, கிறீஸ்தவ அனுபவங்களுக்கு ஊடாகச் செய்யவில்லை.
அந்தச் சிந்தனைகள் பெரிதாக இருக்கலாம் இல்லாதும் விடலாம். ஆயின் டஷ வலறா கூறியதுபோல் எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி.
அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர்.
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா
