Photobucket

28 August, 2009

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்

புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்:
புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறத
ு.

அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே வெளிநாடு;கள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத்; தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார்.
முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே.
ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான். ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர். இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம். புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம். பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது. இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது. இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது. இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன. இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

புலிகள் தமது பாரிய சண்டைப்; படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது. இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.

அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

23அடி நீளம் கொண்ட ‘அரோ’ தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

ஆதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே.

பிரபாகரன் போராளியானது ஏன்

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.

27 August, 2009

படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த அகதிகள்


இலங்கையிலிருந்தும் இராமேஸ்வரம் நோக்கி அகதிகளாக வந்த தமிழ் மக்களிடம் தமிழக மீனவர்கள் சிலர் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்து விட்டு கரையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழக புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

மன்னார், முருங்கன் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் வயது 24, அவரது மனைவி தர்ஷினி வயது 23 மற்றும் அவர்களது 8 வயதுக் குழந்தை ஆகியோர் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நடுக்கடலில் வைத்து படகை நிறுத்திய இலங்கை படகோட்டிகள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் நாட்டுப் படகில் மூவரையும் ஏற்றி விட்டனர்.

அங்கிருந்து தனுஷ்கோடியில் இறங்கிய மூவரும் முகுந்தராஜர் சத்திரம் என்ற பஸ் வண்டியில் ஏறி மண்டபம் முகாமுக்குச் சென்றனர்.

அங்கு அவர்களை அகரிகளாகப் பதிவு செய்ய முடியாது எனக் கூறியதால் தனுஷ்கோடி பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் நடந்த சண்டையில் எமது பெற்றோர்கள் கொல்லப்பட்டதால் இங்கு வந்தோம்.

இங்கு வருவதற்காக, இலங்கைப் படகோட்டிகளிடம் 35 ஆயிரம் ரூபா கொடுத்தோம். அவர்கள் தனுஷ்கோடியில் இறக்கி விடுவதாகக் கூறி இடைவழியில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகில் எங்களை ஏற்றிவிட்டுச் சென்றனர்.

நாட்டுப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் எங்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் செல்லிடத் தொலைபேசி போன்ற பெறுமதியான உடமைகளைப் பறித்துக்கொண்டு கடற்கரையில் இறக்கிவிட்டனர் என்று கூறினர்.

விசாரணைக்குப் பின் இவர்களைப் பொலிஸார் அகதிகளாகப் பதிவுசெய்து மண்டபம் முகாம் அனுப்பினர். அகதிகளிடம் பெறுமதிமிக்க நகைகளைப் பறித்த நாட்டுப்படகு மீனவர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்: தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள்



தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும், ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும், நேற்று(26.08.09) புதன்கிழமை “தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த யூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் “தமிழ்த் தேசிய எழுச்சி” நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சை

தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.

சென்னை

சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு
தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று! முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!” என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

சிதம்பரம்

சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

ஈரோடு

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

மதுரை

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஓசூர்

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை

கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பபூண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் சுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆத்தூர்

சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

வேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈழம்-இந்தியம்-சர்வதேசம்!

சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!

இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.

இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.

அதேசமயத்தில் இந்தியப் பேரரசின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தங்களது அரசியல் போட்டிகள் காரணமாக- ஈழப் போராளிகளிடையே அப்போது நிலவிய வேறுபாடுகளை தமக்குச் சாதகமாக்கி அதில் ‘குளிர்காயத்’ தவறவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்றாலும் அன்று அந்தத் தலைமைகளது நடவடிக்கைகள் ஈழத்தின் போராட்டக்களத்தினைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

move-out-of-safezoneஆனால்,
இன்று ஈழப்போராட்டம் மூர்க்கமாக நசுக்கப்பட்டு மூன்றுலட்சம் தமிழர்கள், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக; வன்னிப்பெரு நிலத்தின் திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள ‘ராஜபக்ஷாசுர’ தாண்டவத்தின் பின்னரும்கூடத் தொடர்ந்துகொண்டிருப்பது வேறு விஷயம்! இதனைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

எந்த உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று; இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ‘தந்தை செல்வா’ முதல் ‘பிரபாகரன்’ வரை போராடிவந்தார்களோ----- அந்த உரிமைகளில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும், மாறாக; மக்கள் ‘மாக்க’ளிலும் கீழாய்ச் சிங்கள அரசால் நடாத்தப்படும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

இதனை இந்தியமும், சர்வதேசமும் நன்கு அறியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் -----

இந்தியா ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அக்கறை செலுத்துகிறது என்றும்; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் நாட்டங் கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சர்வதேசமும், இந்தியாவும் கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அந்நாட்டில் நடைபெற்று வந்த இனஒடுக்கல் பற்றியும் அதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்தும் எதுவும் அறியாது இருந்தனவா?

அதிலும் குறிப்பாக, இந்தியாவுக்கு--- இலங்கையின் இனப் பூசலும், சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளும் ஆரம்ப காலம் முதலே தெரிந்திருக்கிறது!

1964ல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான சமயத்தில் அது இந்தியவம்சாவழித் ‘தமிழர்கள்’ பற்றியது என்பது புரியாமல் இந்தியா அதனை அணுகியது என்று கூறிவிடமுடியாது. அதிகம் ஏன் ,1961ல் தமிழ் மாவட்டங்களில் ‘சிறீமாவோ’ அரசுக்கெதிரான அஹிம்சைப்போர் ‘தந்தை செல்வா’வால் வழிநடாத்தப் பட்டபோது அது தமிழகத்திலும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பும் ‘நேரு-கொத்தலாவலை’ காலத்திலேயே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் பாதுகாப்பு அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தே இருக்கிறது.

1983ல் நிகழ்ந்த ‘கறுப்பு யூலை’ ஈழத்தமிழர்களது உயிர்களுக்கும் அந்நாட்டில் பாதுகாப்புக் கிடையாது என்பதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியதாகக் கூறலாமேயன்றி--- அதற்கு முன்புவரை அவர்கள் அங்கு பூரணமான உரிமைகளை அனுபவித்து வந்தார்கள் என உலகம் நம்பியதாக பொருள்கொள்ள முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான், ’இந்திராவின் இந்தியா’-ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலப்படுத்த முன்வந்தது. அதனைச் சர்வதேசமும் ‘பார்வையாளர் நிலையில்’ ஏற்றுக்கொண்டுமிருந்தது!

இதில் வேடிக்கை யாதெனில்,இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய போதும், பின்னர் இன்று அதேபோராளிகளின் புதிய தலைமுறையினரோடு சேர்த்து அவர்களனைவரையும் சிங்கள அரசின் கரங்களால் அழிப்பதற்கு முன்நின்ற போதும் இந்தச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ‘பார்வையாளர்களா’கவே செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான்!

இந்தியாவின் அணுகுமுறை

இந்தியாவைப் பொறுத்த மட்டில், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலைகள், தனது காலடியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அவை அனைத்தையும் காணாதது போன்று செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்துவதற்குரிய எல்லாவகையான தொழில் நுட்ப-ஆயுத உதவிகளையும் சிங்கள அரசுக்கு அது வழங்கியிருக்கிறது.

தென் தமிழகத்து மக்கள் தங்கள் உடன் பிறப்புகளையொத்த ஈழத்தவர்கள் கோரமாகக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைப் பொறுக்காது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதும், உணர்வுக் கொந்தளிப்பால் சில இளைஞர்கள் தீக்குளித்து மாண்டபோதும் தமிழகத் தலைமை ஒப்புக்காக கண்ணீர் விடவும்,(செல்லாத ஊருக்கு) கடிதம் எழுதவும் முன்வந்ததோடு தனது அரசியல் நாடகத்தை முடித்துக் கொண்டது. இது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானதுங்கூட..

இவ்வாறு இந்திய நடுவண் அரசோ, தமிழ் மாநில அரசோ சிறிதுகூட மனச்சாட்சியின்றிச் செயல்பட்டதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.உலகும் அறியும்.

பின்னர், மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து , இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பன்னாட்டு அவையில் எழுப்பமுயன்ற ‘மனித உரிமை மீறல்’ குற்றச் சாட்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாப்பதற்காக இந்தியா செயற்பட்டதையும், தனது கூட்டாளிகளான வேறு சில வளரும் நாடுகளையும் இந்த அநீதிக்குத் துணைபோக வைத்ததையும் எவரும் மறந்துவிடவில்லை.

இந் நிலையில்தான் இந்தியா ஈழத் தமிழர்களது அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளது என்னும் பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்தியா, உண்மையாகவே தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தின் பொருளையும் உணர்ந்து, அதற்கேற்ப ஓர் அரசியல் தீர்வினை அந் நாட்டில் ஏற்படுத்தித்தருமா ?

அவ்வாறு அது எண்ணினாலும் அந்நாட்டின் சிங்கள அரசு இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே.

உண்மையில், இந்தியா; ஈழத்தமிழர்களது உணர்வுகளையோ அன்றித் தமிழகத்தின் சகோதரத் தமிழர்களது ஆதங்கத்தையோ புரிந்துகொண்டு செயல்படும் என்பது சந்தேகந்தான்!

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்திலும், அதன் பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்கள் என்னும் பெயரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ‘மந்தைத் திடல்’களில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களது தன்மானத்தையும், அவர்களுக்கான மனித உரிமைகளையும் சிறுமைப்படுத்தும் செயலினைச் சிங்க்ள அரசு செய்கின்றபோதும் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

ஸ்ரீலங்கா அரசினால் ‘போர் முடிந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமது பதவிகளையும்-வாரிசுகளின் வசதியான வாழ்க்கையினையும் மட்டுமே பெரிதாக நினைத்து, இனமானத்தையும் மனிதாபிமானத்தையும் அடகு வைத்துவிட்டு வெறும் வாய்ப் பேச்சில் தேனாய்-பாகாய் கசிந்துருகும் தமிழகத் தலைமையும் அதன் தோழமை நடுவண் அரசும் திடீரென தமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு திறந்த மனதுடன் நியாயமான தீர்வொன்றினை ஏற்படுத்தித் தருவார்கள் என்று எவராவது கூறினால் அதனை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.

சர்வதேசத்தின் சாதனை

மற்றொரு பக்கத்தில்; விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது----- அதன் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராயாமல், ஆளுவோர்-ஆளப்படுவோர் என்னும் இருவித கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு- ஆளும் வர்க்கத்துக்கு மற்றொரு ஆளும் வர்க்கம் உதவுவதே ‘உலக தர்மம்’ என்னும் சித்தாந்தத்தில் ஊறிப்போய் கண்முன் நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் கண்டுங்காணாதார் போன்று செயலாற்றுவதில்; சர்வதேசம் வல்லமை மிக்கதாக உருப்பெற்றிருக்கிறது.

Boosa1986Tamilprisonersஅந்த வகையில் இலங்கை அரசின் எல்லாவகையான மனித உரிமை மீறல்களுக்கும் மறைமுகமாகத் துணைசென்றவையும், செல்பவையும் இந்தச் சர்வதேசங்கள்தாம்.

தமது நாட்டின் அரசியல்-பொருளாதார மேம்பாட்டிற்கு எது துணைசெய்வதாக அமைகின்றதோ –அது நியாயமற்றது ஆயினும் அதற்கு ஒத்தூதும் ‘நவீன சித்தாந்தத்திற்கு அடிமைப் பட்டுப்போன இந்தச் சர்வதேசங்கள்தாம் இவ் வருட முற்பாதியில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் சிறிய கால இடைவெளியில் கொன்றழிக்கப்பட ஏதுவாக ஸ்ரீலங்காவுக்கு( முன் கூட்டியே) ஆயுதங்களை வழங்கியிருந்தன.

ஒருபுறம் அடக்குமுறை அரசுக்கு ஆயுதங்களையும், போர் நிபுணத்துவத்தையும் “நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு” என்னும் பெயரில் வழங்கிவரும் இந்நாடுகள், இது போன்ற “புரிந்துணர்வின்” பின்னால் மிதிபடும் மனித உரிமைகளையும், அதனால் ஏற்படும் மனித அவலங்களையும் பற்றிச் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை.

மாறாகத் தமது செயல்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி அவற்றைத் தனிமைப்படுத்தும் செயலிலும் முனைப்புக் காட்டுகின்றன.

விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம்- தீவிர வாதம்- இவை யாவும் உருவாவதற்கான பின்னணியே, சமூகத்தினதும்-ஆளும் வர்க்கத்தினதும் ‘அடிப்படை உரிமை மீறல்களே’ என்னும் அரிச்சுவடியினைப் புரிந்து கொள்ளாது-

அல்லது புரிந்து கொள்ள மறுத்து,

மேம்போக்காகத் தமக்குப் பிடிக்காத

அல்லது

அடங்காத இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ அடையாளம் இடும் அநீதியான அணுகுமுறை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிவிட்டிருக்கிறது.


ரஷ்ய-அமெரிக்கப் பனிப்போர் முடிவுற்று, தனக்குச் சவாலாக இருந்த “ரஷ்ய’ கட்டமைப்பு குலைந்து விட, அடுத்தடுத்து சோவியத் சார்பு கம்யூனிஸ நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் சிதறடிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலை “நீண்ட கால நோக்கில்” உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது படிந்தது.

போரிடும் வலிமை பெற்ற, அதே சமயம் தனது ஆற்றலுக்குச் சவாலாகவிருந்த சோவியத் ஒன்றியத்தையும் அதன் சித்தாந்தத்தில் ஊறிய நாடுகளையும் வலியழித்தாகி விட்டது. அடுத்து உலகப் பொருளாதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க வல்லரசு தனது கையில் எடுத்த ஆயுதந்தான் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது.

அதன் இந்தத் திட்டத்துக்கு வலுசேர்ப்பது போன்று ‘இரட்டைக் கோபுரத் தகர்ப்பும்’ ‘அல்கெய்டா’ நடவடிக்கைகளும் அமைந்து விட்டன.

தொடர்ந்து, அதிபர் ‘புஷ்’ நிகழ்த்திய ; ‘சதாம் ஹுசெய்னின் இரசாயன ஆயுதங்கள்’ குறித்த மிக்குயர் தொழில் நுட்ப உத்திகளுடன் கூடிய ‘நாடகம்’ சதாமுக்கு எதிரான போரிற்கு ஐ.நா வின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

உலகில் மற்றொரு ‘சண்டிய’ராக உருவாகிவந்த சதாமை அடக்கவும், போரிடுவதன் காரணத்தால் அவ்வாறு போரிடும் அணிகளது வளங்கள் நலிவடையும் என்னும் கணிப்பினாலும்- அமெரிக்கா-ஈராக் இவை இரண்டினையும் மோதவிடுவதில் (மறைமுகமாக) விருப்புக்கொண்ட வளரும் நாடுகளிற் சிலவும் அதிபர் ‘புஷ்’ஷின் இம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் விலகி நின்றன.

இதன் பயனாக விளைந்ததுதான் ‘சதாம் வதம்’!

அதனைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த அமெரிக்க-மேற்குலகிற்கு மாற்றாக, கிழக்கில் ‘சோவிய’த்தின் இடத்தைப் பிடிப்பதில் சீனாவும்-இந்தியாவும் போட்டியிட ஆரம்பித்தன.

இலங்கையின் இனப் பூசலில் இவ்விரு நாடுகளும் மூக்கை நுழைத்துக் கொண்டதும், ஈழத் தமிழரது விடுதலையினை செயலற்றுப் போகச்செய்ததையும், இந்தக் கோணத்தில்தான் ஆராயவேண்டும்

மேற்கு நாடுகள் பலவற்றில் ஸ்ரீலங்காவின் இனப் படுகொலைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும்- அதனைத் தொடர்ந்து ‘ஸ்ரீலங்காவைக் கண்டித்து மேற்குலகம் .பன்னாட்டுச் சபை வரை இலங்கை அரசின் ‘மனித உரிமை மீறல்களை’ எடுத்துச் சென்றதும், இந்தக் கிழக்கு-மேற்கு அரசியல் பலப் பரீட்சைக்கு களம் அமைத்துத் தந்தன.

இதில் ’பலிக் கடா’ ஆக்கப்பட்டது ஈழத் தமிழினந்தான்!

மனித உரிமை- மக்களாட்சிப் பண்பு- தனிமனித் சுதந்திரம்- பேச்சுரிமை- உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று பல வகைகளிலும், கிழக்கை விடவும் பலபடிகள் முன்னேற்றம் பெற்றவையாக மேற்குலகம் உள்ளது!

பணத்துக்காக அல்லது அற்ப சலுகைகளுக்காக தனது உரிமையை விற்பது- பணத்தின் மூலம் பதவிகளை அடைவது-மனித விழுமியங்களைக் மதிக்காதிருப்பது- காலை வாருதல்- மத இன துவேஷம் போன்றவற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையே கிழக்கில் அதிகம் காணப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளை நியாயமான வகையில் பெற்றுத்தரும் நிலை இந்தியாவை விடவும், மேற்குலகத்திடமே அதிகம் உள்ளது.

இதற்குச் செயலுருக் கொடுக்கும் ஆற்றலும் ,இன்று புலம் பெயர் தமிழர்களிடமே தங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன், ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பழ மொழி ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது.

“அழுதாலும், பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்” என்பது அந்தப் பழமொழி!

ஆகையால், எமது ‘ஈழக் குழந்தை’யை நாம் பெற்றெடுக்க வேண்டுமாயின் நாம் தான் அதனை முயன்று பெற்றெடுக்கவேண்டும். பிறர் எமக்காக அதனைப் பெற்றுத் தருவர் என நினைப்பது அறிவுடமையாகாது.

ஈழ ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்த வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்ற தொண்டர்களுக்கு பாராட்டு விழா, பொதுக்கூட்டம் வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் நடக்க இருந்தது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பெரியார் தி.க. மாநகர செயலாளர் கோபால் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் போலீசார் எல்.டி.டி.இ. இயக்கத்திற்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் எனக்கூறி அனுமதி மறுத்து விட்டனர்.

இதையடுத்து வருகிற 31-ந்தேதி அன்று நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இராணுவம் செய்த கோரக் கொலைகள்: வைகோ அறிக்கை

இலங்கையின் சிங்களக் கொலைபாதக அரசு, தமிழ் இனத்தைக் கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நுற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்து உள்ளது. உலகில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலைக் காட்சிகள், இருதயத்தைப் பிளக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கின்ற அந்தக் காட்சிகளில் தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்த இளைஞர்கள், முழு நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்ட நிலையில், தரையில் உட்கார வைக்கப்பட்டு, அவர்களின் பிடரியிலும், முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். துடிதுடிக்க அந்த இளைஞர்கள், இரத்த வெள்ளத்தில் செத்து மடிகின்றனர். ஏராளமான இளைஞர்கள் இப்படிக் குரூரமாகச் சிங்கள இராணுவத்தினரால் வரிசையாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தப் படுகொலைகள் நடந்தபோது, சிங்களச் சிப்பாய் ஒருவனின் கைத்தொலைபேசியில் படம் பிடித்த காட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. கொல்லப்பட்ட இளைஞர்களின் கைகளில் கயிறு கட்டப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, ஏராளமான இளைஞர்களை இப்படிக் கைகளைப் பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, பின்னர் கயிற்றால் கட்டி, விலங்குகளைக் கட்டி இழுத்து அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து இருந்ததும், சித்திரவதை செய்ததும் தெரிய வந்து உள்ளது.

தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கும் கொலைபாதகம் நடத்தி வருகிற கொடியவன் ராஜபக்சேயின் அரசும், இராணுவமும், தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதும், கொல்வதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதும், அன்றாட நிகழ்வுகளாக, சர்வசாதாரணச் சம்பவங்களாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளது.

தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும், உலகத்துக்குத் தெரிவித்தன. மனிதகுல வரலாற்றில் யூதர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையினர்கூடச் செய்யத் துணியாத முறையில், சிங்கள இராணுவத்தினர், தமிழ் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வதைத்துத் துன்புறுத்திக் கொன்று அழித்தனர்.

யுத்தகளங்களில் தோற்கடிக்கப்பட்ட படைவீரர்களைக் கைது செய்தாலும், அவர்களை மனிதாபிமானத்தோடு போர்க்கைதிகளாக நடத்த வேண்டும் என்று, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், ஜெனீவாவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்து இருந்த காலத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களை மிகுந்த பண்பாட்டோடு புலிகள் நடத்தி வந்தார்கள் என்பதை பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களே பல கட்டங்களில் தெரிவித்து உள்ளனர். ஆனால், சிங்கள இராணுவம், மிருகங்களைவிடக் கேவலமான முறையில், கொடூரமாகத் தமிழர்களைத் துன்புறுத்தினர். குறிப்பாகத் தமிழ்ப் பெண்களை, ஆடைகளை அகற்றிப் படுநாசம் செய்தனர். அதிலும் யுத்தகளத்தில் போரில் உயிர்நீத்த தமிழ்ப் பெண்களின் சீருடைகளை அகற்றி, கோரச் சிரிப்புடன் சிங்களச் சிப்பாய்கள் வன்புணர்ச்சி நடத்தியது, உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத கொடுமை ஆகும்.

நம் நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைக் காட்சிகளைக் காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.

ஈராக்கில், அபு கிரைப் சிறையில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிப்பாய்களால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஈராக்கியர்கள் ஆளாக்கப்பட்ட உண்மை, முதலில் கைத் தொலைபேசிக் காட்சிகளாக வெளியில் வந்தவுடன், ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்க நாட்டிலேயே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு பத்து ஆண்டுக்கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

அதைப்போல, கியூபாவில் குவாண்டனமோ வளைகுடாவில் அமைந்து உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தில், கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதற்கு உலகமே கண்டனம் தெரிவித்தது. அந்த முகாமை மூடிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

ஆனால், அங்கெல்லாம் நடந்ததைவிட மிகக் கொடூரமான முறையில் தமிழர்களை சிங்கள இராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள இராஜபக்சே அரசையும், இராணுவத் தளபதிகளையும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முன்வர வேண்டும்.

முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டி விலங்கிட்டு, சிங்களவன் துப்பாக்கியால் சுடும்போது, அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து, துடிதுடிக்க அவர்கள் மடிவதையும் காண்கையில், நம் உள்ளத்தில் வேதனை நெருப்புப் பற்றி எரிகிறது.

ஐயோ, நாதியற்றுப் போனோமா நாம் இந்த நானிலத்தில்? என்று மனம் பதறித் துடிக்கிறது. இக்கோரப் படுகொலைகளைச் செய்துவிட்டு, வழக்கம்போலச் சிங்கள அரசு, அப்படி நடக்கவே இல்லை என்றுகூறி விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.

இலங்கையில் சிங்கள அரசால் மனித உரிமைகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, தமிழ் இனம் உலகில் எங்கும் நடந்து இராத இனக்கொலைக்கு ஆளாகிய நிலையில், நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆய்வு நடத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, வாக்கு அளித்த நாடுகள் தங்கள் மனச்சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாவத்தைச் செய்தன.

தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த இந்திய அரசு, ஐ.நா. மன்றத்திலும், இலங்கையை ஆதரித்தது வெட்கக்கேடான இழிசெயல் ஆகும். ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மழை வெள்ளத்தோடு அவர்களின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கும், தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்குக் காரணமான ஆயுதங்களையும், அனைத்து இராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்குத் தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்புக் கிடையாது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசின் ரத்த வெறியாட்டம் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தே தீரும். இந்தத் துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள், மனம் தளர்ந்துவிடாமல், நம் இனத்தைக் காக்க, கொடுமை செய்தோரைக் கூண்டில் நிறுத்த, உறுதிகொண்டு போராடுவோம். அனைத்து உலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுவோம்.இந்தக் கோர நிகழ்ச்சிகளை அறியும் வேளையில், உலகெங்கும் உள்ள மனித மனங்கள் பதறவே செய்யும். ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசின் கொடுமைகளையும் உலக மக்கள் அறியும்போது, இன்றைய நிலைமை நிச்சயமாக மாறும். தமிழர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்குரல், நியாயத்தின் குரல் என்பதை உலகம் ஒருநாள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையோடு, நம் தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.

26.08 2009
தாயகம் வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க

26 August, 2009

தமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா?

தமிழீழம் என்ற:
இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும்
தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது.

முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை,
இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம்.

இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக பட்ச வேலைத்திட்டமாக அகதி முகாம்களில் இருக்கும் மக்களை மீட்டாலே போதும் என்ற நிலைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து விட்டனர். என்றால் இது மிகையாகாது. போராட்டஙகள் கவனயீர்ப்புக்கள், சாலை மறியல்கள், துண்டுப்பிரசுர விநியோகம் என்று புத்துணர்வுடன் கடந்த பத்து மாதங்கள் போராடிய எமது மக்களின் உணர்வுகளும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்ததோடு மெளனமாகி அழுகின்றது.

ஏன் இந்த சோர்வு?
எதனால் இந்த பின்னடைவு?

தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அரணாகக் கொண்டே வாழ்ந்தனர். தாம் வீட்டுக்குள் இருக்கும் போது அவர்கள் மட்டும் போராட வேண்டும் என்று எண்ணினார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு எந்த தமிழனும் வீதியை மறிக்க நினைக்கவில்லை. 24 மணிநேரமும் போராட முனையவில்லை. காரணம் "அவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள்" என்ற அலட்சிய நோக்கு.

இன்னும் சொல்ல போனால் நாம் பணம் கொடுதால் போதும் மற்றவை எல்லாம் முடியும் என்று எமது விடுதலைப்போரை வியாபாரமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர்.

இன்று விடுதலைப்புலிகள் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர்களும் சோர்வடைந்துள்ளமை இவர்களின் மூல சக்தி எது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமது தமிழீழ விடுதலைக்கான போரை அரசியல் வழிமுறையூடாக தாம் தொடர உறுதிபூண்டுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இன்றுதான் போராட்டத்தை அறிந்தவர்கள் போல, விமர்சனம் என்ற பெயரில் முரணான கருத்துக்களை முன்வைப்பதும். பின்பு அக் கருத்துக்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிவுபடுத்துவதும். அதிகரித்து வருகின்றது.

குறிப்பிட்ட சிலரோ தாமே போராட்டத்தை கட்டி காப்பவர்கள் போல தம்மை முன்னைய காலத்தில் அடையாளப்படுத்திய போதும், இன்று போராட்டத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி, இன்னும் சிலரோ தாம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டுள்ள கட்டமைப்புக்குள் இல்லை என்பதால் அந்த கட்டமைப்புக்கள் நேர விரையம் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டனர். அத்துடன் மீண்டும் மக்கள் எழுச்சி கொள்வதுவும் அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதுவும் தேவையற்ற செயற்பாடு என்றும் க்ர்ர்ற முற்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று பலரின் வாயில் உச்சரிக்கப்படுவது முகாமில் இருக்கும் போராளிகளை, மக்களை மீட்க வேண்டும் என்பதே! ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தொடர்ந்தும் தற்காலிகமான தீர்வுகளை நோக்கி பயணிப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ எமது மக்கள் மாத்திரமே!

கூடாரங்களுக்குள் மக்கள் இருப்பது வேதனையே! சித்திரவதைக் கூடங்களுக்குள் போரளிகள் வதைபடுவது ஏற்க முடியாதது தான்.ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாம் ஒரு தற்காலிக தீர்வாக மக்களை , போராளிகளை வெளியேற்றி விட்டால் மட்டும் போதுமா?

நாளைக்கு மீண்டும் இந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த பிரச்சினையை இவ் வகையில் தீர்கலாம் என்று நினைப்பவர்கள் முன்வைத்துள்ளனர். யாரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. ஆள் ஆளுக்கு ஒரு ஆய்வு கட்டுரை! ஆளாளுக்கு ஒரு செயற்பாட்டு வடிவம். போதாக்குறைக்கு வீராப்புக்கள் வேறு.

இன்று ஏற்பட்டுள்ள ஓர் சோர்வு நிலையில் பிரித்தானியத்தமிழர் பேரவை ஆரம்பித்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முயற்ச்சி நிச்சயம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும்

எனவே எல்லைகள் கடந்தும் விஸ்வரூபம் எடுக்கும் சிக்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு எமது தேச விடுதலைக்கான பணியை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான வழிநடத்தலினூடாக பயணிப்பதே எம் இனத்தின் விடுதலைக்கு நாம் செய்யும் கைமாறாகும். எனவே நாம் இந்த விடுதலைப்போருக்கும் எம் மக்களின் அமைதியாக வாழ்வுக்கும் கொடுத்த விலை கொஞ்சமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்