மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதுடன் 3 லட்சம் மக்களை நாசி பாணி வதை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்காவின் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யாதீர்கள் என மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியான பரப்புரை நடத்திவரும் நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின்படி நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதித் துறையான ஆயத்த ஆடைகள் துறையின் வருமானம் கடந்த ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5.6 விழுக்காட்டினால் குறைந்துள்ளது. மே மாத விற்பனை நிலைவரம் இதனைவிட மோசமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற விற்பனையைவிட இந்த ஆண்டு 22.23 விழுக்காடு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தில் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் ஆடைகள் வாங்குவது குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 21.6 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 2008 ஆம் ஆண்டு மே, ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 10.8 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு தொடக்கம் காலாண்டு காலப்பகுதியில் 8.8 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அரையாண்டு முடிவில் மொத்த ஏற்றுமதி 2.4 விழுக்காட்டினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு இளவேனில் காலத்துக்கு என வழங்கப்பட்ட கொள்முதல் கட்டளைகளுக்கான துணிமணிகளை சிறிய நிறுவனங்கள் ஒக்ரோபரில் ஏற்றுமதி செய்ய தொடங்கியதும் இந்த வீழ்ச்சி சரிசெய்யப்பட்டு விடும் என ஆடை ஏற்றுமதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தேவைகள் குறைந்திருப்பதும் விலை போட்டியுமே ஆடை ஏற்றுமதி வீழ்ச்சிக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். |
01 September, 2009
சிறிலங்காவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ச்சியாக இரு மாதங்கள் வீழ்ச்சி
புல்மோட்டை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட 3 மாதங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அனுமதி
புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதகாலமாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தமது உறவினர்களைத் தேடி புல்மோட்டைக்குச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரால் கடந்த வாரம் வரையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விபரித்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து புல்மோட்டைக்குச் சென்று தனது மகனைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்புவதற்கு தனக்கு மூன்று நாட்கள் தேவையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
"அந்த முகாமுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருந்தது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குச் செல்வதற்கு ஒரேயொரு பேருந்துதான் உள்ளது. அதில் பயணிப்பதற்கே ஒரு நாள் சென்றது. அதன் பின்னர் முச்சக்கர வாகனம் ஒன்றில் மூன்று கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றால், மகனுடன் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எனக்குத் தரப்பட்டன" எனவும் அவர் கவலையுடன் கூறினார்.
புல்மோட்டையில் உள்ள முகாம்களிலும் மருத்துவமனையிலும் சுமார் 6 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களில் சிலர் போரின் இறுதிக்காலத்தில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களாகவுள்ள அதேவேளையில் ஏனைய சிலர் வருடக்கணக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மட்டக்களப்பில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து தனது மகனைப் பார்வையிடுவதற்காக புல்மோட்டைக்கு வந்த பெண்மணி, ஊடகங்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள முகாம்கள் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனவே தவிர, புல்மோட்டை முகாம்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
புல்மோட்டை முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் அனைத்தும் வனியாவில் உள்ள முகாம்களுக்கு மட்டுமே சென்று பார்வையிடுகின்றன எனவும் தெரிவித்த அவர், புல்மோட்டை முகாம்களுக்கு யாராவது சென்றுள்ளது பற்றி தான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் புல்மோட்டைக்கு வந்தவர்கள் கடந்த வாரம் முகாம்களில் உள்ள தமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் தனது மகனைப் பார்வையிடுதற்காக தான் சென்றபோது அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் சிலரும் புல்மோட்டையில் சிலருமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முகாம்களில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு கவனத்திற்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றங்கள்:பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது.
இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக 'ரைம்ஸ்' கூறியது.
உயிரிழப்புக்கள் அநேகமாக சிங்கள ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் 'ரைம்ஸ்' நாள் ஏடு கூறியிருந்தது.
கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது.
இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.
எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.
போரின் கடைசிக் காலப் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது.
இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.
இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிங்கள ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாத கால விசாவில் வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அவ்வாறு வருவோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக மண்டபம் தனித்துணை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனி வீடு, குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன.
இவர்கள் விசா காலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும்.
இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் கூறுகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அகதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் முகாமில் 10 நாட்கள் வரை தங்கலாம். அதற்கும் மேல் தங்குபவர்களை அகதிகளாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது என்றனர்.
சேபியப் படுகொலைகளை விட இலங்கையில் இடம்பெற்றது கொடூரம்
அரச படைகளுக்கு 58 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கொலைகளைப் பார்வையிடும்போது அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்படவில்லை, சித்திரவதைகளுக்கு உள்ளாகவில்லை, கொலைசெய்வதற்கு முன்னர் தாக்கப்படவில்லை.
ஆனால் இலங்கை இராணுவமோ அவை அனைத்தையும் செய்கின்றது. இருப்பினும் ஐ..நா உட்பட பல உலகநாடுகள் தொடர்ந்து மவுனம் காப்பது மிகவும் ஆச்சரியத்துக்குரியதும், வருந்தத்தக்க விடயமும் ஆகும்.
31 August, 2009
மீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கரம்
|
விடுதலைப்புலிகள் பற்றி பேச எனக்கு தடை இல்லை:சீமான்

தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார்.
அப்போது சீமான்,’’என்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. என்னுடைய வழக்கின்போது,தடை செய்யப்பட்ட அமைப்பின் படத்தையோ, அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதோ தவறல்ல என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இறையான்மையைச் பற்றி பேசும் இந்தியப் பேரரசு, தமிழர் தேசியத்தின் உரிமையைப் பறிக்கிறது. அமெரிக்காவில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக போராட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு, சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள்.
இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் ராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3மாதகாலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மவுனமாக இருக்கின்றனர்.
மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்’’என்று பேசினார்.
