Photobucket

22 August, 2009

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகசீன் சிறையில் தமிழ்க் கைதிகள் இன்று காலை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 90 தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மகசீன் சிறைச்சாலையில் 96 தமிழ் கைதிகள் உள்ளபோதிலும் உடல்நிலை காரணமாக ஆறு கைதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஏனைய 90 கைதிகளும் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக சிறைச்சாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து மலரவன் என்ற தமிழ் அரசியல் கைதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு:

உங்களின் உண்ணாநிலைப் போராட்டத்தினை எப்போது தொடங்க உள்ளீர்கள்?

நாளை (இன்று) சனிக்கிழமை தொடங்கவுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் என்ன கோரிக்கைகளை முன்வைத்து தொடங்க உள்ளீர்கள்?

எமது விடுதலையை வேண்டி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து எமது போராட்டத்தினை தொடங்க உள்ளோம்.

அந்த மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு:

(1) கடந்த 4 வருடங்களாக நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எமது உறவுகள் எதுவித பொருளாதார உதவிகளும் இன்றி சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே எமது விடுதலையை வேண்டி - விடுதலை எமக்கு மட்டும் அன்றி எமது குடும்பங்களுக்கும் வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

(2) உள்நாட்டுப் போர் முடிவடைந்து சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ளதால் போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களுக்கு பிணை அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(3) பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருக்கும் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உங்களின் கோரிக்கைகளை யாருக்கு நீங்கள் அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்திருக்கின்றீர்கள்?

சிறிலங்காவின் நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அனுப்பியுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் எத்தனை பேர் இறங்க உள்ளீர்கள்?

நாம் இருக்கின்ற பிரிவில் 90 பேர் இருக்கின்றோம். 90 பேரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்க உள்ளோம்.

விடுதலை வேண்டி கோரிக்கை விடுத்திருக்கின்றீர்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தனை ஆண்டுகளில் உங்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றதா?

சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவை காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றதே தவிர அவர்கள்மீது எந்தவிதமான வழக்கு விசாரணைகளும் இன்றி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பிணை வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருக்கின்றீர்கள். அது தொடர்பான மேலதிக விபரம் அல்லது விளக்கத்தினை தரமுடியுமா?

எங்களின் வழக்குகளைப் பொறுத்தவரையில் பிணை அனுமதி உயர்நீதிமன்றத்தில்தான் தீர்மானிக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் என்றாலும் உயர்நீதிமன்றத்தில் இருந்து சட்டமா அதிபருக்கு அனுப்பி - சட்டமா அதிபர் மூலமாகத்தான் - அதுவும் சட்டமா அதிபர் உடன்பட்டால் மாத்திரமே பிணை கிடைக்கும். அவ்வாறு உடன்பட்டு எவருக்கும் பிணை கிடைத்ததாக இதுவரை தெரியவில்லை.

மகசீன் சிறைச்சாலையில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளீர்கள்?

96 பேர் உள்ளோம். உடல்நலப் பிரச்சினையால் ஆறு பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஆகக்குறைந்த வயது, ஆகக்கூடிய வயது விபரங்களை தரமுடியுமா?

ஆகக்குறைந்த வயதில் 18 அல்லது 19 வயதில் ஒருவர் உள்ளார். வயதில் கூடியவர்கள் என்ற வகையில் 62 வயதில் உள்ளனர்.

குறிப்பாக இவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்?

வடக்கு - கிழக்கு, மலையகம் உள்ளிட்ட எல்லாப் பகுதியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அனைவரும் எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்கள்?

சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் அனைவரும் (90-க்கும் அதிகமானோர்) எத்தனை ஆண்டுகாலமாக மகசீன் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்?

மகசீன் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக அல்லாமல் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து மாற்றப்பட்டு - மாற்றப்பட்டு கடைசியாக தற்போது மகசீன் சிறைச்சாலையில் இருக்கின்றோம். இவர்கள் ஒரு வருடம் தொடக்கம் நான்கு வருட வரையான காலப்பகுதியில் உள்ளவர்கள்.

உங்களின் உணவுத் தேவைகளோ அவை எந்தவகையில் சிறைச்சாலைகளில் நீங்கள் மாறி - மாறி சிறைச்சாலைக்கு - சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உங்களின் உணவுத் தேவைகளோ அல்லது அத்தியாவசிய வசதிகளோ, படுக்கை வசதிகளோ எந்தளவில் இருக்கின்றன?

அத்தியாவசிய தேவைகள் என்று எங்களுக்கு எதுவும் சிறப்பாக எதுவும் செய்து தரப்படுவதில்லை. உணவு மட்டும் மற்றைய சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று வழங்கப்படுகின்றது.

நீங்கள் எந்தவகையில் உயிர் அச்சுறுத்தலோ அல்லது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றீர்கள்?

சக கைதிகளால்தான் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தும்போது சிறைக்காவலர்களோ அல்லது வேறு யாராவது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிடுமாறு ஏதாவது அச்சுறுத்தல்கள் விடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு கூறுமளவுக்கு இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வரலாம்.

நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா?

சிறைச்சாலை நிர்வாகத்தால் சில அழுத்தங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து தமிழர்களும் உங்களுக்கு என்ன உதவியை வழங்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் எதிர்பார்க்கின்றீர்கள்?


எங்களுக்கு வெளியில் இருந்து அரசுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்களை தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்
என எதிர்பார்க்கின்றோம்.

உங்களை யாராவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பது உண்டா?

உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்ட காலங்களில் வந்து சந்தித்தார்களே தவிர அதன் பிற்பாடு எவரும் வந்து சந்திக்கவில்லை.

வவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தோரை சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவு

வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக அனுப்பவும், கடும்மழை வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்வது குறித்தும் அரச அதிபர் தலைமையில் நேற்றுக்காலை விசேட கூட்டம் நடைபெற்றது.

பருவமழை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றவும் மலசலகூட வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக சகல மாற்று ஏற்பாடுகளையும் செய்வதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை நிவாரணக் கிராமங்களில் உள்ள வலது குறைந்தோர், வயோதிபர்கள், மன நோயாளர்கள் தொடர்பாகவும் அவர்களை பொறுப்பேற்க உறவினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைப்பதற்குமான வேலைகளை துரிதப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர் நிவாரணக் கிராமங்களுக்குள் தரவுகளை சேகரித்து வருகின்றனர் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் வசித்து வருபவர்களில் வவுனியாவில் இவர்களுக்கு அசையாத சொத்துக்கள் இருப்பின் நெருங்கிய உறவினர்கள் அவர்களை பொறுப்பேற்றால் விடுவிக்கப்படுவர். இதற்குரிய பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வலயம் 4, வலயம் 5 நிவாரணக் கிராமங்களில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீடு காணி உடமைகள் இருப்பதினை பிரதேச கிராமசேவையாளர் உறுதிப்படுத்தினால் விடுவிக்க சிபார்சு செய்யப்படும். இராணுவத்தின் அனுமதிக்கு பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் பருவமழை ஆரம்பிக்க முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றிவிடலாம் என்றும் நம்பப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேரின் பெயர்கள் கிடைத்துள்ளதாக அவை தொடர்பான பரிசீலனை நடைபெறுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு-சுசில் பிரேம் ஜயந்த!

யாழ் குடாவில் உள்ள 31 பாடசாலைகளை சிறந்த பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 32.5 மில்லியன் ரூபா வீதம் வழங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

இது தவிர வடக்கிலுள்ள 75 பாடசாலைகளுக்கு கணனிப் பிரிவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலுள்ள 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஐ.தே.க. முன் வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறிய தாவது, வடபகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை கிடையாது. அண்மையில் 400 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கில் 3500 ஆசிரியர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டனர்.

தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை நடத்தியது. இந்தத் தவறுகளுக்கு 12 அதிகாரிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.

அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் தவறினாலேயே இந்தப் பிழைகள் நடந்தன. 9 மாகாணங்களிலும் தவணைப் பரீட்சை நடத்த 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடத் தேவையான பணத்தை கல்வி அமைச்சு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் முதல் நிதி ஆணைக் குழுவினூடாக தேவையான பணம் வழங்கப்படும்.

வினாத்தாள்கள் தயாரிப்பது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவூட்ட உள்ளோம். உயர்தரப் பரீட்சை வினாத் தாள்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பேராசிரியர்கள் தலைமையிலான குழுக்களே வினாத் தாள்களை தயாரித்தன.

இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக பொறுப்பேற்கப்பட்ட 17 பாடசாலைகளிலும் அடுத்த தவணையின் போது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் உள்ள சாதாரணதர மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தப்படும் என்றா

21 August, 2009

சிறிலங்கா சிறைகளில் வாடும் தடுப்புக்காவல் கைதிகள் நாளை முதல் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசீன் சிறை, மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் தடுப்புக்காவல் கைதிகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் எனவும், பூசா தடுப்பு முகாமில் உள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிகின்றது.

கடந்த இரண்டு தசாப்த காலத்தில் கைது செய்யப்பட்ட பெரும் தொகையான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. சுமார் 50 வரையிலானவர்களே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக உள்ளனர்.

விசாரணைகள் இன்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் அதிகமாக சிறைவாசம் இருக்கின்ற போதிலும் அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தென்பகுதிச் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் தமக்கு பொது மன்னிப்பு வழங்கி, தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கும் கடிதங்களை அனுப்பிவைந்திருந்த போதிலும் அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காததையடுத்தே உண்ணாநிலைப் போராட்டத்தை அடுத்தகட்டமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரகடனத்தை வெளியிட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.

தமிழகத்தில் வன்முறையை தூண்டுவது எங்கள் நோக்கமல்ல. அண்டை நாட்டில் லட்சக் கணக்கில் நம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவர்களை பாதுகாக்க குரல் கொடுப்பது எங்கள் கடமை என்றார். புலிகளை ஆதரிப்பதில் தவறில்லை:

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார்ராமதாஸ்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முல்லைத்தீவு, இரணைமடுவில் விமான படையினரின் புதிய ஒடுபாதை!



முல்லைத்தீவு மற்றும் இரணைமடுவில் புதிய விமானப்படை தளங்கள் அமைக்கப்பட்டு ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன என விமானப்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார். ஏற்கனவே புலிகளால் பாவிக்கப்பட்டுவந்த இலகுரக விமானங்களை தரையிறக்குவதற்கு பாவிக்கப்பட்ட ஒடுபாதைகளே அவை என்றும், மேற்படி விமான ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டதும் அதனை விமானப்படையினர் பாவிப்பர்.

விமான ஒடுபாதைகளுக்கான அபிவிருத்தி பணிகளை விமானப்படை தளபதி ஏயார் மார்சல் றோசான் குணதிலக நேற்றுக்காலை பார்வையிட்டுள்ளார். விமான ஒடுபாதைகளின் அபிவிருத்தி பணிகள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் நிறைவு செய்யப்பட்டு ஒடுபாதை விமானப்படையினரின் முற்று முழுதான பாவனைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்த புலிகளின் முன்னாள வான்படைத் தளங்களுக்கு சிறிலங்கா வான் படைத் தளபதி திடீர்ப் பயணம்

கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த பகுதிகளுக்கு சிறிலங்காவின் வான் படைத் தளபதி எயர் மாஷல் ரொஷான் குணதிலக்க நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அவற்றை நேரில் பார்வையிட்டார். வன்னிப் பிராந்தியம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுப் பகுதியிலும், முல்லைத்தீவு டாவட்டத்திலும் தமது வான்படைக்கான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். இந்த ஓடுபாதைகளைப் பயன்படுத்தியே வான் புலிகள் சிறிலங்காவின் இராணுவ பொருளாதார நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

சிறிலங்கா படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைத்து தமது வான்படைத் தளங்களை அந்த இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே ஓடுபாதைகளைத்தான் சிறிலங்கா வான் படையினரும் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிய போது ஓடுபாதைகள் சேதமடைந்திருந்ததாகவும், இருந்த போதிலும் தாம் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் குறிப்பிட்ட ஓடுபாதைகளை இலகுரக வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய விதமாக திருத்தியமைத்திருப்பதாகவும் சிறிலங்கா வான்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதியில் வான்படைக்கான முகாம்களை அமைத்து அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளைப் பார்வையிட்ட சிறிலங்காவின் வான்படைத் தளபதி, இங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுடனும் அது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்: உலகத் தமிழர் பிரகடனம்.


ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், தற்பொழுது நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :

1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.